கனடாவில் 'புரஜெக்ட் பே' என்ற பெயரில் பொலிஸார் நடத்திய தீவிர தேடுதல் நடவடிக்கையில் , சுமார் 1,039 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் மற்றும் 17 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
அமெரிக்க எல்லையிலிருந்து கனடாவிற்குள் சரக்கு லொரிகள் மூலமாக கொக்கைன், மெத்தம்பெட்டமைன் மற்றும் ஓப்பியம் உள்ளிட்ட ஆபத்தான போதை மருந்துகள் கடத்தப்படுவதாகக் கனடா பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, கனடா பொலிஸார் அமெரிக்கா மற்றும் கனடா எல்லைப் பகுதிகளில் 'புரஜெக்ட் பே' என்ற சிறப்புச் சோதனையைத் ஆரம்பித்துள்ளது.
ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள 22 இடங்கள் உட்பட விண்ட்சர், லசலே, கொரூனா, பிராம்ப்டன், மார்க்கம் மற்றும் கலேடன் ஆகிய பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் சோதனையின் முடிவில் 1.7 தொன் எடையுள்ள போதை மருந்துகள் 17 துப்பாக்கிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் சர்வதேச சந்தை மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.1,039 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.


