TamilsGuide

முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கை முன்னேற்றம் - உலகில் 4 ஆவது வேகமான வளர்ச்சி

முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை தொடர்பில் வேகமாக முன்னேறி வரும் வளர்ந்து வரும் சந்தை நாடுகளில் ஒன்றாக இலங்கை முன்னேறியுள்ளது. இலங்கைகலாச்சாரம்

சர்வதேச நிதி நிறுவனம் (Institute of International Finance – IIF) வெளியிட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான மதிப்பீட்டில், அதிக முன்னேற்றம் கண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 4 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

கடன் மறுசீரமைப்புக்குப் பின்னர் சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இது முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

IIF வெளியிட்டுள்ள “முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை அறிக்கை 2026: வெளிப்படைத்தன்மையின் பலன்”  அறிக்கையின் படி, இலங்கையின் முதலீட்டாளர் உறவுகள் தொடர்பான மொத்த மதிப்பெண் 2025 ஆம் ஆண்டில் 37.33 ஆக இருந்த நிலையில், 2026ஆம் ஆண்டில் 43.67 ஆக அதிகரித்துள்ளது.

இதன் மூலம், சர்வதேச சிறந்த நடைமுறைகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட்ட 57 வளர்ந்து வரும் சந்தை மற்றும் அபிவிருத்தி அடையும் பொருளாதார நாடுகளில், இலங்கை முதல் 25 சதவீதத்துக்குள் இடம்பெற்றுள்ளது.

முதலீட்டாளர் உறவுகள் மதிப்பீட்டில் 6.3 புள்ளிகள் முன்னேற்றத்தை பதிவு செய்த இலங்கை, வியட்நாம், பெலிஸ் மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக அதிக முன்னேற்றம் கண்ட நாடாக தரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கடன் வெளிப்படைத்தன்மை நடைமுறைகளை மேம்படுத்திய நாடுகளிலும் இலங்கை முன்னணி இடத்தைப் பெற்றுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கைகலாச்சாரம்

நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் தகவலின்படி, கடன் வெளிப்படைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாக (ESG) தரவுகள் மற்றும் கொள்கை தகவல்களை வெளியிடுவதில் ஏற்பட்ட முன்னேற்றமே இலங்கையின் தரநிலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

கடன் வெளிப்படைத்தன்மை மேம்பாட்டில், 2025 ஆம் ஆண்டில் 19 ஆவது இடத்தில் இருந்த இலங்கை, 2026ஆம் ஆண்டில் 5 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகம் (PDMO) உள்ளிட்ட அரச நிறுவனங்களின் தொடர்ச்சியான நடவடிக்கைகள், முதலீட்டாளர்களுடனான தொடர்புகளை வலுப்படுத்துதல் மற்றும் கடன் தகவல்களை வெளிப்படையாக வெளியிடுதல் ஆகியவை இந்த முன்னேற்றத்துக்கு காரணமாக அமைந்ததாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த முன்னேற்றங்கள் மூலம் இலங்கையின் முதலீட்டாளர் நம்பிக்கை அதிகரிக்கும் என்றும், அரச பத்திர முதலீட்டாளர்களின் எண்ணிக்கை விரிவடையும் என்றும், சர்வதேச மூலதன சந்தைகளில் நாட்டின் நம்பகத்தன்மை உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உலக நாடுகள் பாதுகாப்பு செலவுகள், தூய்மையான எரிசக்தி முதலீடுகள், செயற்கை நுண்ணறிவு (AI) உட்கட்டமைப்பு மற்றும் அதிகரித்து வரும் சுகாதார செலவுகள் போன்ற காரணங்களால் அதிகரித்து வரும் நிதித் தேவைகளை எதிர்கொள்ளும் நிலையில், கடன் வெளிப்படைத்தன்மை என்பது வளர்ந்து வரும் நாடுகளுக்கான கடன் செலவுகளை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறியுள்ளது என IIF தெரிவித்துள்ளது.

நிதி மற்றும் கடன் தொடர்பான தகவல்களை சரியான நேரத்தில், நம்பகத்தன்மையுடன் மற்றும் தொடர்ச்சியாக வெளியிடுவது முதலீட்டாளர்களின் நிச்சயமற்ற தன்மையை குறைத்து, குறைந்த கடன் செலவுகளுக்கும், சிறந்த கடன் தர மதிப்பீடுகளுக்கும் வழிவகுக்கும் எனவும் IIF குறிப்பிட்டுள்ளது.
 

Leave a comment

Comment