பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையை மேலும் திறம்படச் செய்யும் நோக்கில் மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’ பேருந்து சேவை இன்று (28) கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்திற்காக முதன்முறையாக இச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது டன் மன்னாரிலிருந்து தலைமன்னார் வரை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக முதலாவது ‘சிசு செரிய’ பேருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘சிசு செரிய’ திட்டத்தின் கீழ்இ வடக்கு மாகாணத்தின் சில மாவட்டங்களுக்கு பேருந்துகள் ஈடுபடுத்தப் பட்டிருக்கவில்லை.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் தலையீட்டின் பேரில், 20 பேருந்துகளை ஈடுபடுத்தி ‘சிசு செரிய’ திட்டத்தின் முதற்கட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட குறித்த சேவைக்கு மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து சங்கத்தின் பேரூந்து ஒன்றே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர்,
‘சிசு செரிய’ திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 20 வருடங்கள் கடந்துள்ள போதிலும் மன்னார் மாவட்ட மாணவர்கள் பல வருடங்களாக பாடசாலைக்குச் செல்வதற்கான போக்குவரத்து சேவைகள் இன்றி பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருந்தனர்.
அத்துடன் கடந்த கால அரசாங்கங்கள் வடபகுதி மாணவர்களைப் புறக்கணித்துச் செயற்பட்டுள்ளமை இதன் மூலம் தெளிவாகிறது.
இச் சேவையின் கீழ் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து சாதாரண கட்டணத்தில் பாதி மட்டுமே அறவிடப்படும் என்பதுடன் மீதித் தொகையை அரசாங்கம் பொறுப்பேற்கும்.
இதன் மூலம் கல்விக்காக பயணிப்போருக்கு கணிசமான நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஜெகதீஸ்வரன், மன்னார் மாவட்ட அரச அதிபர் கே. கனகேஸ்வரன், வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் எஸ். விமலேஸ்வரன், மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தர்மலிங்கம் ரமேஷ் உட்பட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள்இ அரச அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள், பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


