TamilsGuide

கனடாவில் விமான ஓடுபாதைக்குள் சொகுசு வாகனம் விபத்து - சாரதி கைது

கனடாவின் விமான ஓடுபாதை ஒன்றில் சொகுசு வாகனமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள அபோட்ஸ்போர்டு சர்வதேச விமான நிலையத்தில், நபர் ஒருவர் தனது சொகுசு வாகனத்தை பாதுகாப்பு வேலியை உடைத்துக் கொண்டு இயங்கிக் கொண்டிருந்த விமான ஓடுபாதைக்குள் ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சனிக்கிழமை மாலை சுமார் 4:30 மணியளவில் இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பாதுகாப்பு வேலி உடைந்தவுடன் விமான நிலைய ஊழியர்கள் உடனடியாகச் செயல்பட்டனர். மேலும், அங்கு இயங்கிக் கொண்டிருந்த பிற விமானங்களைப் பாதுகாப்பாக வேறு வழிகளில் திருப்பிவிட விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் விரைந்து நடவடிக்கை எடுத்தது.

இச்சம்பவத்தால் விமான நிலையச் செயல்பாடுகள் சிறிது நேரம் பாதிக்கப்பட்ட போதிலும், விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பியது.

அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இச்சம்பவம் தொடர்பாக 53 வயதுடைய நபர் ஒருவரைக் காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.

இது குறித்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், ஓட்டுநர் போதையில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 
 

Leave a comment

Comment