TamilsGuide

ஆழ்ந்த நட்பு இருக்கும் இடத்தில்தான் உரிமையுடன் கூடிய ஊடலும் எழும்

' தாய்க்குப் பின் தாரம்’ படத்தின் தெலுங்கு டப்பிங்கில் தனக்காக வேறு ஒருவரின் குரலை ‘டப்’ செய்து தேவர் வெளியிட்டது தொடர்பாக, இடையில் சில காலம் எம்.ஜி.ஆருக்கும் சின்னப்பா தேவருக்கும் ஊடல் ஏற்பட்டாலும் அதனால் அவர்களது நட்பு பழுதுபட்டதில்லை. சொல்லப்போனால், ஆழ்ந்த நட்பு இருக்கும் இடத்தில்தான் உரிமையுடன் கூடிய ஊடலும் எழும். புரிதல் ஏற்பட்டு அதன்பின் ஏற்படும் கூடல் மேலும் நெருக்கத்தை அதிகரிக்கும். அப்படி, தேவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஏற்பட்ட நெருக்கம் கடைசிவரை பிரிக்க முடியாததாக இருந்தது. அதற்கு பின் எம்.ஜி.ஆரை வைத்து ‘தாய் சொல்லை தட்டாதே’, ‘தாயைக் காத்த தனயன்’, ‘தர்மம் தலைகாக்கும்’ என்று பல வெற்றிப் படங்களை தேவர் எடுத்தார்.

1967-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன் நடிகர் எம்.ஆர்.ராதாவால் எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். துப்பாக்கித் தோட்டா தொண்டையை துளைத்துச் சென்றது. மறுபிறப்பெடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது அவரது திரையுலக வாழ்வே முடிந்தது என்று கூறினர். எம்.ஜி.ஆருக்கு மீண்டும் பேச்சுத் திறன் வருமா? என்று நிச்சய மில்லாத நிலை. எம்.ஜி.ஆரை மருத்துவமனை யில் சந்தித்து தான் அடுத்து எடுக்கப் போகும் ‘விவசாயி’ படத்துக்கு அட்வான்ஸ் தொகையை எம்.ஜி.ஆரின் கையில் தேவர் கொடுக்கும் அளவுக்கு இருவரின் நட்பு பரஸ்பர நம்பிக்கையுடனும் வலிமையாகவும் இருந்தது.

‘‘எம்.ஜி.ஆர். மீண்டும் நடிப்பது நிச்சயம் இல் லாத நிலையில், அவருக்கு பணம் கொடுக்க வேண் டுமா?’’என்று சிலர் கேட்டபோது, உறுதியான குரலில் தேவர் கூறினார்... ‘அவர் (எம்.ஜி.ஆர்) ‘தாய்க்குப் பின் தாரம்’ படத்தில் நடித்த பிறகுதான் நாம் முழுசா சாப்பிட்டோம். அவரால் நடிக்க முடியாவிட்டால் செலவு கணக்கில் வைத்துக்கொள்கிறேன் போ..’ என்றாராம் .

தி  இந்து

Leave a comment

Comment