களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் இன்று (25) காலை 8 மணியளவில் காரும் லொறியும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற பாரிய விபத்தில் குழந்தைகள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர்.
வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியினூடாகப் பயணித்த காரொன்று, செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்திற்கு அருகாமையில் வைத்து எதிர் திசையில் வந்த லொறியுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.
அதிவேகமாகப் பயணித்த இரு வாகனங்களும் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் வீதியில் குடைசாய்ந்து பாரிய சேதத்திற்குள்ளாகின.
இவ்விபத்தில் காரில் பயணித்த குழந்தைகள் உட்பட மூவரும், வர்த்தக நடவடிக்கைகளுக்காகக் கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற லொறியில் பயணித்த இருவருமாக மொத்தம் ஐந்து பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காகக் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இரு வாகனங்களும் முற்றாகச் சேதமடைந்து குடைசாய்ந்த போதிலும், எவ்வித உயிரிழப்புகளுமின்றி அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாகச் சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் களுவாஞ்சிகுடி பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.


