மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு பகுதியில் சட்ட விரோதமாக முன்னெடுக்கப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம் பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் பொலிஸாரால் இணைந்து முற்றுகையிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அதிகரித்துச்செல்லும் கசிப்பு உற்பத்தியை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
முழுநாடும் ஒன்றாக என்னும் ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக போதையொழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதன்கீழ் வவுணதீவு பிரதேசத்தில் வவுணதீவு பிரதேசசபையின் உறுப்பினர்கள் மற்றும் வவுணதீவு பொலிஸார் இணைந்து தொடர்ச்சியாக நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
இது தொடர்பில் வவுணதீவு பிரதேசபையின் பிரதி தவிசாளர் த.டிசாந்த் தலைமையில் பிரதேசசபை உறுப்பினர்கள்,வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் இணைந்து கரையாக்கன்தீவு பகுதியில் உள்ள வாவிக்கரையோரம் முற்றுகையினை முன்னெடுத்தனர். LanguageResources
இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த மூவர் அங்கிருந்து தப்பிச்சென்றதுடன் அங்கிருந்த பெருமளவான கசிப்பு போத்தல்களையும் கசிப்பு உற்பத்திக்கான கோடாவினையும் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கசிப்பு மற்றும் பொருட்களை வவுணதீவு பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளையும் முன்னெடுத்துவருகின்றனர்.


