15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்ட மசோதாவுக்கு பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை பெரும்பான்மை ஆதரவுடன் வாக்களித்துள்ளனர்.
இதன் மூலம், ஐரோப்பிய ஒன்றியத்தில் சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு இவ்வாறான வயது வரம்பை அறிமுகப்படுத்தும் முதல் நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது.
இந்த மசோதா, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் வலுவான ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது. தற்போது அவர் இந்தச் சட்டத்தில் கையெழுத்திட்ட பின்னர், அது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்கெடுப்புக்குப் பின்னர் சமூக ஊடகமான X தளத்தில் பதிவிட்ட மக்ரோன், “இந்தக் கல்வியாண்டு முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்கள் தடை செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மனநலம், பாதுகாப்பு மற்றும் தனியுரிமையைப் பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
சமூக ஊடக தளங்களின் பரிந்துரை முறைகள், சிறுவர்களை அதிக நேரம் இணையத்தில் ஈடுபடச் செய்வதுடன், சில சமயங்களில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களுக்கும் அவர்களை உட்படுத்துவதாகவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளின் தாக்கங்கள், சமூக ஊடக நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் குழந்தைகள் மீதான டிஜிட்டல் தாக்கம் குறித்து உலகளவில் அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில் பிரான்ஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதேபோன்ற நடவடிக்கையை கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா மேற்கொண்டிருந்தது. அந்நாடு 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்யும் சட்டத்தை அறிமுகப்படுத்தியது.
மேலும், பிரிட்டன், ஸ்பெயின், கிரீஸ் மற்றும் டென்மார்க் உள்ளிட்ட நாடுகளும் சிறுவர்களுக்கான சமூக ஊடக வயது வரம்புகளை அறிமுகப்படுத்துவது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
பிரான்சின் புதிய சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பு, அந்நாட்டின் ஒலி-ஒளி மற்றும் டிஜிட்டல் தகவல்தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான ஆர்காமுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சமூக ஊடக நிறுவனங்கள் 15 வயதுக்குட்பட்ட பயனர்கள் கணக்குகளை உருவாக்குவதைத் தடுப்பதற்கான நியாயமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், பயனர்களின் வயதை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பது தொடர்பில் தொழில்நுட்ப சவால்கள் தொடர்ந்தும் காணப்படுகின்றன. வயது சரிபார்ப்பு நடைமுறைகள் தனியுரிமை மற்றும் இணைய அணுகல் உரிமைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலைகளும் சில தரப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்னர், குழந்தைகளை பாதுகாப்பதற்காக இணைய ஆபாச உள்ளடக்கங்களை அணுகுவதற்கான வயது சரிபார்ப்பு நடைமுறைகளையும் பிரான்ஸ் அறிமுகப்படுத்தியிருந்தது.
பிரான்சில் 12 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், குறிப்பாக TikTok போன்ற தளங்களில் அதிக நேரம் செலவிடுவதாக ஆர்காம் அமைப்பு தெரிவித்துள்ளது.
பரிந்துரை அல்காரிதம்கள் மூலம் சிறுவர்கள் தொடர்ச்சியான மற்றும் சில நேரங்களில் தீங்கு விளைவிக்கக்கூடிய உள்ளடக்கங்களைப் பார்க்கும் நிலை உருவாகிறது எனவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
சமூக ஊடக நிறுவனங்கள், சிறுவர்களைப் பாதுகாக்க ஏற்கனவே பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளன. இதற்கிடையில், ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், சமூக ஊடகங்கள் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விதிகளுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான பொறுப்பு சமூக ஊடக நிறுவனங்களிடமும் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், பேச்சுரிமை மற்றும் இணைய உள்ளடக்கங்களுக்கான அணுகல் தொடர்பான கவலைகளை முன்வைத்து பிரான்சில் சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான உலகளாவிய விவாதங்களுக்கு மத்தியில், பிரான்சின் இந்த புதிய சட்டம் ஐரோப்பிய நாடுகளில் முக்கியமான முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது.


