TamilsGuide

சீனப் பிரஜையிடம் 2 கோடி ரூபா கொள்ளை - மேலும் நால்வர் கைது

கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலி வீதியின் டின்ஸ்டன் சந்திக்கு அருகில், சீனப் பிரஜை ஒருவரிடமிருந்து பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற நபர் ஒருவரை, அங்கு இருந்த பொதுமக்கள் பிடித்து கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

குறித்த சந்தேக நபரை மேலதிகமாக சோதனை செய்தபோது, அவரிடமிருந்து 290 மில்லிகிராம் ஹஷீஷ் போதைப்பொருளும், சீனப் பிரஜையிடமிருந்து கொள்ளையிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரூ. 20,000,000/- (2 கோடி) பணமும் கைப்பற்றப்பட்டன.

கொள்ளுப்பிட்டி பொலிஸார் சந்தேகநபரை 2026.07.14 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக 7 நாள் தடுப்புக் காவல் உத்தரவு பெற்றுள்ளனர்.

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குற்றம் நடைபெற்ற இடத்துக்கு வருவதற்காக சந்தேகநபர் வாடகை வாகனமொன்றைப் பயன்படுத்தியிருந்தமை தெரியவந்தது. 

அதனைத் தொடர்ந்து, அந்த வாடகை வாகனப் பயணம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கொழும்பு 05, ஜாவத்தை பகுதியில் இரு சந்தேகநபர்களும், சீனப் பிரஜை ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் கோட்டை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 2026.07.23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதே கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட வேண்டியிருந்த மற்றொரு சந்தேகநபரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகன், சட்டத்தரணியின் உதவியுடன் 2026.07.21 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேகநபர் 2026.07.22 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
 

Leave a comment

Comment