அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான ராணுவ மோதலில் பலியான அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்று தெரிவித்துள்ள செய்தி சர்வதேச அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஈரானுடன் நடைபெற்று வரும் ராணுவ மோதலில் பலியான அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை, அமெரிக்கா முன்னெடுத்த முந்தைய வரலாற்றுப் போர்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஜோர்டான் எல்லைப் பகுதியில் அமைந்திருந்த அமெரிக்க ராணுவ முகாம்கள் மற்றும் மத்திய கிழக்கில் நடந்த தாக்குதல்களில் மேலும் சில அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பலியான அமெரிக்க வீரர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது. அமெரிக்காவில் இதற்குக் கடும் எதிர்ப்புகளும் விமர்சனங்களும் எழுந்த நிலையில், டிரம்ப் இந்த விளக்கப் பதிவை வெளியிட்டுள்ளார்.
வரலாற்றில் அமெரிக்கா சந்தித்த நீண்டகாலப் போர்களுடன் தற்போதைய ஈரான் மோதலை ஒப்பிட்டு டிரம்ப் பதிவிட்டுள்ள புள்ளிவிவரங்கள்:
*ஆப்கானிஸ்தான் போர் 20 ஆண்டுகள் நீடித்து 2,000 உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.
*ஈராக் போர் 9 ஆண்டுகள் நீடித்து 4,600 உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.
*வியட்நாம் போர் 19 ஆண்டுகள் 5 மாதங்கள் நீடித்து 58,220 உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.
*கொரியப் போர் 3 ஆண்டுகள் 1 மாதம் நீடித்து 36,574 உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.
*வெனிசுலா ராணுவ நடவடிக்கை 1 நாளில் 0 உயிரிழப்புடன் முடிந்தது.
*தற்போதைய ஈரான் மோதலில் 4 மாதங்களில் 18 பேர் மட்டுமே பலியாகியுள்ளனர்.
அமெரிக்கா வரலாற்று ரீதியாக எதிர்கொண்ட ரத்த களறியான முந்தைய போர்களுடன் ஒப்பிடுகையில், 4 மாதங்களாக நடைபெற்று வரும் ஈரான் உடனான மோதலில் 18 வீரர்கள் மட்டுமே உயிரிழந்திருப்பது மிகக் குறைவான எண்ணிக்கையே என்று டிரம்ப் வாதாடியுள்ளார்.
ஆனால், போரில் உயிரிழந்த வீரர்களின் தியாகத்தையும் அவர்களின் குடும்பங்களின் உணர்வுகளையும் வெறும் எண்களாகவும் புள்ளிவிவரங்களாகவும் ஒப்பிட்டுப் பேசுவது கண்டிக்கத்தக்கது என எதிர்க்கட்சியினரும் மனித உரிமை அமைப்புகளும் டிரம்பின் இந்தப் பதிவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
"அமெரிக்க வீரர் ஒருவர் கொல்லப்பட்டாலும் அதற்கு ஈரானிடம் இருந்து பலமடங்கு விலையைப் பெற வைப்போம்" என டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில், இந்தப் புள்ளிவிவரப் ஒப்பீட்டுப் பதிவு வெளியாகியுள்ளது.


