மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிள்களை ஓட்டிப் பார்ப்பதாகக் கூறி, அவற்றைத் திருடிச் சென்ற நூதனத் திருடன் ஒருவரை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் நேற்று (19) கைது செய்துள்ளனர்.
சத்துருக்கொண்டான் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இந்தச் சந்தேகநபரிடமிருந்து திருடப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், காத்தான்குடிப் பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றுக்குச் சென்ற சந்தேகநபர், அங்கிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்குவதாகக் கூறி, அதனை ஓட்டிப் பார்ப்பதற்காகக் கடை உரிமையாளரிடமிருந்து பெற்றுக்கொண்டு தப்பியோடியுள்ளார்.
பின்னர், திருடப்பட்ட அந்த மோட்டார் சைக்கிளுடன் மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் உள்ள வீதிச் சமிக்ஞை விளக்குக்கு அருகில் வந்துள்ளார்.
அங்கிருந்தபடியே ‘Ikman.lk’ இணையத்தளத்தில் தனது மோட்டார் சைக்கிளை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்திருந்த கொக்கட்டிச்சோலை பகுதியைச் சேர்ந்த நபரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவரது மோட்டார் சைக்கிளை வாங்குவதாகக் கூறி குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்துள்ளார்.
கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த நபர் தனது மோட்டார் சைக்கிளுடன் அங்கு வந்ததும், சந்தேகநபர் அவரது மோட்டார் சைக்கிளையும் ஓட்டிப் பார்ப்பதாகக் கூறியுள்ளார்.
அதற்கு உபகரமாக, தான் காத்தான்குடியில் இருந்து திருடி வந்த மோட்டார் சைக்கிளை அவரிடம் நம்பிக்கையாகக் கொடுத்துவிட்டு, அந்த நபரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளார்.
இவ்வாறு திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை அவர் வாகரைப் பகுதியில் கொண்டு சென்று விற்பனை செய்துள்ளார் என்பது பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, கடந்த 2023ஆம் ஆண்டிலும் இதேபோன்றதொரு மோட்டார் சைக்கிள் திருட்டை இவர் அரங்கேற்றியுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் கடந்த காலங்களில் 8 குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டுக் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றப் பிணையில் வெளிவந்தவர் எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்களுடன் சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், மேலதிக விசாரணைகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.


