TamilsGuide

அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி - பொது மக்கள் அவதானம்

அஸ்வெசும நலத்திட்ட பயனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மோசடி முறையில் அபகரிக்கும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை (Welfare Benefits Board) தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சபை, நாட்டின் பல பகுதிகளில் சிலர் நலன்புரி நன்மைகள் சபையின் தலைமையக அதிகாரிகளாக போலியாக நடித்து, பல்வேறு தொலைபேசி இலக்கங்களில் இருந்து அஸ்வெசும பயனாளிகளை தொடர்புகொள்வதாக கூறியுள்ளது.

அந்த அழைப்புகளில், பயனாளிகளின் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும் அல்லது வேறு காரணங்களை முன்வைத்து பணம் கோரப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் சபையின் அறிவிப்போ அல்லது அனுமதியோ இன்றி மேற்கொள்ளப்படுவதாக வலியுறுத்தியுள்ள நலன்புரி நன்மைகள் சபை, இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு பொதுமக்களிடம் கோரியுள்ளது. 

மேலும், இது தொடர்பில் கள உத்தியோகத்தர்கள் அவதானத்துடன் செயல்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, இவ்வாறான தொலைபேசி அழைப்புகளை பெற்ற அஸ்வெசும பயனாளிகள், தங்களது பிரதேசத்திற்கு உரிய பொலிஸ் பிரிவின் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் சபை கேட்டுக்கொண்டுள்ளது.
 

Leave a comment

Comment