வவுனியா – போகஸ்வெவ வீதியின் வெளிக்குளம் சந்தியிலிருந்து மாமடுவ வரையான 8 கிலோமீற்றர் தூரத்தை கார்ப்பட் இட்டு அபிவிருத்தி செய்யும் பணிகள், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க அவர்களின் தலைமையில் இன்று (15) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வவுனியாவிலிருந்து போகஸ்வெவ வரை 48 கிலோமீற்றர் தூரம் காணப்படுவதுடன், இவ்வீதியானது யுத்தக் காலத்திலிருந்தே கடுமையாக சேதமடைந்த நிலையில் காணப்பட்ட ஒரு வீதியாகும்.
இதன் முதற்கட்டமாக 8 கிலோமீற்றர் தூரத்தை கார்ப்பட் இட்டு அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 529 மில்லியன் ரூபாயாகும்.
இப்பணிகள் 18 மாத காலத்திற்குள் நிறைவு செய்யப்படவுள்ளன.
இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் மாமடுவவிலிருந்து ரம்பவெட்டிய வரையும், மூன்றாம் கட்டத்தின் கீழ் போகஸ்வெவ வரையும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இவ்வீதி அபிவிருத்தி செய்யப்படுவதன் மூலம் 18 கிராமங்களைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைவர்.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஜெகதீஸ்வரன் அவர்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள், உள்ளூராட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பிரதேசவாசிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


