ஈரானின் ஆன்மீக தலைவர் மோஜ்தபா கொமெய்னி உயிர் பிழைப்பதற்கு 90 சதவிகிதம் வாய்ப்பில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே உச்சகட்டப் போர்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில், “ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களுக்கு அமெரிக்கா இனி பாதுகாப்பு அளிக்கும். ஆனால், அச்செலவினங்களுக்கு ஈடாக அவ்வழியாகக் கொண்டு செல்லப்படும் சரக்குகளுக்கு 20 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும்” என்று ட்ரம்ப் நேற்று அறிவித்திருந்தார்.
இது தொடர்பாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்தின் நேர்காணலில் பேசிய ட்ரம்ப் தெரிவித்ததாவது: “ஈரானின் கடற்படை, விமானப்படை என அனைத்தும் அழிந்துவிட்டன. அவர்களின் வான்வழித் தடுப்பு அமைப்புகள் செயலிழந்துவிட்டன.
அவர்களின் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர். கொமெய்னி இறந்துவிட்டார். மோஜ்தபா கொமெய்னி உயிர் பிழைக்க 90 சதவிகிதம் வாய்ப்பில்லை” எனத் தெரிவித்தார்.
ஈரானின் ஆன்மீக தலைவர் அயதுல்லா அலி கொமெய்னி, அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட பிறகு, அவரது மகன் மோஜ்தபா கொமெய்னி, புதிய ஆன்மீக தலைவராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல் ஒன்றில் மோஜ்தபா கொமெய்னியும் பலத்த காயமடைந்ததாகவும், தற்போது சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதன்காரணமாக, ஈரான் மற்றும் இராக்கில் கடந்த வாரம் நடைபெற்ற அயதுல்லா அலி கொமெய்னியின் இறுதிச் சடங்கு நிகழ்வில் கூட அவர் கலந்துகொள்ளவில்லை.
இந்த சூழலில், மோஜ்தபா கொமெய்னி 90 சதவிகிதம் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என ட்ரம்ப் கூறியுள்ளார்.


