செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியும், அதற்கான தரவு மையங்களின் எண்ணிக்கையும் உலகளவில் கார்பன் உமிழ்வை அதிர்ச்சியூட்டும் வகையில் உயர்த்தி வருகின்றன.
சமீபத்திய சர்வதேச சுற்றுச்சூழல் அறிக்கைகளின்படி, மைக்ரோசாப்ட், அமேசான், கூகுள் ஆகிய முன்னணி நிறுவனங்களின் கார்பன் வெளியேற்றம் நடப்பு நிதியாண்டில் மிக வேகமாக அதிகரித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் மட்டும் இந்த மூன்று முன்னணி நிறுவனங்களின் ஒட்டுமொத்த கார்பன் உமிழ்வு 119 மில்லியன் மெட்ரிக் டன்னாகப் பதிவாகியுள்ளது. இந்த அளவு, பிரான்ஸ் நாட்டின் ஒட்டுமொத்த கார்பன் உமிழ்வில் மூன்றில் ஒரு பங்கிற்குச் (1/3) சமமானதாகும். மேலும், செக் குடியரசு நாட்டின் மொத்த உமிழ்வுக்கு இணையானது என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
மைக்ரோசாப்ட்: கடந்த ஆண்டை விட இதன் கார்பன் உமிழ்வு '25% முதல் 27% வரை' அதிகரித்துள்ளது (சுமார் 20-21 மில்லியன் மெட்ரிக் டன்).
கூகுள்:இதன் உமிழ்வு ஓராண்டில் 18% உயர்ந்துள்ளது.
AI தொழில்நுட்பத்தை இயக்குவதற்கும், தகவல்களைச் சேமிப்பதற்கும் பிரம்மாண்டமான தரவு மையங்கள் உலகெங்கும் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றுக்குத் தேவையான மின்சார நுகர்வு வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
புதிய உள்கட்டமைப்புகளை உருவாக்குதல் மற்றும் வன்பொருட்களை உற்பத்தி செய்தல் ஆகியவற்றின் மூலம் உமிழ்வு அதிகரித்துள்ளது. இந்த நிறுவனங்கள் 2030 அல்லது 2040-க்குள் 'பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு' என்ற இலக்கை எட்டத் திட்டமிட்டிருந்தாலும், தற்போதைய AI தேவைகள் அந்த இலக்குகளை அடைவதைக் கடினமாக்கியுள்ளன.
தொழில்நுட்ப உலகிற்கு வரப்பிரசாதமாகப் பார்க்கப்படும் AI, தற்போதைய சூழலில் உலக வெப்பமயமாதலை அதிகரிக்கும் ஒரு முக்கிய காரணியாக மாறி வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


