TamilsGuide

தனது வீரர்களையே காட்டுமிராண்டித்தனமாக தண்டிக்கும் ரஷ்யா - நிர்வாணமாக்கி கொடூரம்; அதிர்ச்சியில் உலகம் 

உக்ரைனுக்கு எதிரான போர் நான்கு ஆண்டுகளை எட்டவுள்ள நிலையில், ரஷ்ய ராணுவத்தின் அக ஒழுக்கக் கட்டுப்பாடுகள் மற்றும் தண்டனை முறைகள் எந்த அளவிற்கு மனிதாபிமானமற்ற நிலைக்குச் சென்றுள்ளன என்பதை அம்பலப்படுத்தும் நெஞ்சை உலுக்கும் வீடியோ ஒன்று வெளியாகி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனின் முன்வரிசைப் போர்க்களப் பகுதிகளில் (Frontline Trenches) எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த 28 வினாடி வீடியோவில், ரஷ்யாவைச் சேர்ந்த இரு வீரர்கள் முழுமையாக நிர்வாணமாக்கப்பட்டு, மரத்தில் ஒட்டும் நாடாவால் கட்டி வைக்கப்பட்டு, அவர்களின் சொந்த நாட்டு அதிகாரிகளாலேயே மிகக் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தப்படும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

போர்க்களத்தில் உக்ரைன் ராணுவத்தின் ‘பாபா யாகா’ (Baba Yaga) எனப்படும் அதிநவீன கனரக ட்ரோன் தாக்குதல்களுக்குப் பயந்து, தங்களின் உயிரைக் காத்துக் கொள்ளப் போர் முனையிலிருந்து பின்வாங்க முயன்ற அல்லது தாக்குதல் உத்தரவுகளை மறுத்த வீரர்களுக்குத்தான் ரஷ்ய ராணுவத் தளபதிகள் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான தண்டனையை வழங்கியுள்ளனர்.

மரத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ள அந்த வீரர்கள் தங்களை மன்னித்துவிடுமாறு அலறிக் கதறும் சத்தமும், அதற்கு அந்த அதிகாரி கடுமையான கெட்ட வார்த்தைகளால் திட்டி, அவர்களைப் பனியைக் கட்டாயப்படுத்தி உண்ணச் சொல்லித் துப்பாக்கிக் கட்டையால் தாக்கும் கொடூரமும்  பதிவாகியுள்ளது.

உக்ரைனின் ஆதரவு டெலிகிராம் சேனலான ‘எக்ஸைல்நோவா+’ (Exilenova+) மூலம் முதன்முதலில் கசிந்த இந்த வீடியோவின் நம்பகத்தன்மையைச் சர்வதேச ஊடகங்கள் இன்னும் தனிச்சையாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், ரஷ்ய ராணுவத்தில் இது போன்ற சித்திரவதைகள் சாதாரண ஒன்றுதான் என ரஷ்யாவின் சுதந்திர ஊடகமான ‘வெர்ஸ்ட்கா’ (Verstka) சுட்டிக்காட்டியுள்ளது.

தாக்குதலுக்குச் செல்ல மறுக்கும் அல்லது ராணுவத்தை விட்டு ஓட முயலும் ‘துரோகிகளை’ முன்வரிசை மரங்களில் கட்டி வைத்து, அவர்களை உக்ரைன் ட்ரோன்களின் நேரடித் தாக்குதலுக்கு இரையாக்கும் சடங்கு போன்ற தண்டனையை ரஷ்ய அதிகாரிகள் கையாண்டு வருவதாகச் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கவலை தெரிவித்துள்ளன.

ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான இளம் வீரர்களைப் போரில் இழந்து தவித்து வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் ராணுவம், எஞ்சியிருக்கும் வீரர்களைக் கட்டாயப்படுத்திப் போரிட வைக்க இத்தகைய ‘பயங்கரவாத’ உத்திகளைத் தனது சொந்த படைக்குள்ளேயே பயன்படுத்தி வருகிறது.

போரின் கொடூர முகத்தையும், ரஷ்ய ராணுவத்திற்குள் நிலவும் சட்டமற்ற அராஜகத்தையும் இந்த வீடியோ அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளதால், உலக நாடுகள் பலவும் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன.  
 

Leave a comment

Comment