TamilsGuide

வெப்ப அலை தாக்கத்தால் இங்கிலாந்தின் பல பகுதிளில் நீர் பாவனை கட்டுப்பாடு

நாடு மற்றொரு நீண்ட வெப்ப அலையினை எதிர்நோக்கும் வேளையில், வறட்சி நிலவுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளதால், மேலும் பல மில்லியன் இங்கிலாந்து மக்களுக்கு குழாய் மூலம் நீர் பாய்ச்சுவதற்குத் தடை விதிக்கப்படவுள்ளது.

ஒரு ஆண்டில் 34 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் அதிகமான வெப்பநிலை பதிவான நாட்களின் எண்ணிக்கை எட்டை எட்டியதன் மூலம் இங்கிலாந்தில் வியாழக்கிழமையன்று (09) மற்றொரு சாதனை முறியடிக்கப்பட்டது;

1976 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளின் கோடைக்காலத்தில் பதிவான ஏழு நாட்கள் என்ற முந்தைய அதிகபட்ச எண்ணிக்கையை இது கடந்துவிட்டது.

நாட்டின் சில பகுதிகளில் வறட்சி நிலவுவதற்கான அபாயம் அதிகரித்து வருவதாக இங்கிலாந்து அதிகாரிகள் அண்மையில் எச்சரித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அதிகாரிகள் ஈஸ்ட் ஆங்லியா, டெவோன் மற்றும் கார்ன்வால் ஆகிய பகுதிகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், நீர் நிறுவனங்களும் பற்றாக்குறையாகி வரும் வளங்களைச் சமாளிக்கப் போராடி வருகின்றன.

இந்த நிலையில் இன்று (10) காலை, இங்கிலாந்தின் கிழக்குப் பகுதியில் உள்ள தனது 50 இலட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு, குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதற்கான (hosepipe) தடையை ‘ஆங்லியன் வாட்டர்’ (Anglian Water) நிறுவனம் அறிவித்தது.

அதன்படி, சனிக்கிழமை அதிகாலை 1 மணி முதல், வாடிக்கையாளர்கள் தோட்டங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்கோ, கார்களைக் கழுவுவதற்கோ அல்லது நீச்சல் மற்றும் சிறுவர் குளங்களை நிரப்புவதற்கோ குழாய்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அதேநேரம், கேம்பிரிட்ஜ் வாட்டர் நிறுவனமும் தனது 350,000 வாடிக்கையாளர்களுக்கு தற்காலிக குழாய் நீர் பயன்பாட்டுத் தடையை அறிவித்துள்ளது.

கடந்த மூன்று தசாப்தங்களில் அந்நிறுவனம் இத்தகைய கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.

இது தவிர சவுத் ஈஸ்ட் வாட்டர் நிறுவனம், ஜூலை 3 அன்று கென்ட் மாகாணத்தின் பல பகுதிகளில் குழாய் நீர் பயன்பாட்டிற்குத் தடை விதித்தது.
 

Leave a comment

Comment