நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் ஏற்பட்ட மோதல்கள் குறித்து நாடாளுமன்றத்தை கவனத்திற்குக் கொண்டுவருவதற்காக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அவசர ஒத்திவைப்பு விவாதமொன்றைக் கோரி சபாநாயகருக்குக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.
குறித்த கடிதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரஞ்சித் மத்தும பண்டார, கபீர் ஹாஷிம், சுஜீவ சேனசிங்க, கிங்ஸ் நெல்சன், ரோஹிணி விஜேரத்ன மற்றும் ஹெக்டர் அப்புஹாமி ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
இதேவேளை , ஜூலை 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களில் 27 பேர் உயிரிழந்ததுடன், 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்றும், அந்த மரணங்கள் மற்றும் காயங்களுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் இந்த விடயத்தின் பாரதூரமான நிலை மற்றும் அவசரத் தன்மையைக் கருத்திற்கொண்டு, அவசர ஒத்திவைப்பு விவாதத்தை வழங்குமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு அதிகாரிகளால் தற்போது முடிந்துள்ள போதிலும், பெண் கைதிகள் தொடர்ந்தும் தமது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


