பாக்யராஜ் விட்டு சென்ற காலத்தால் அழியாத டாப் 10 காமெடி கிளாசிக்ஸ்!!
சினிமா
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர்களில் ஒருவரான கே. பாக்யராஜின் ம*றைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது நக்கல், நையாண்டி மிகுந்த வசனங்கள், ஆழமான கருத்துகளை கூட நகைச்சுவை மூலம் கடத்தும் திறன், அசாத்தியமான நடிப்பு, அடுத்த வீட்டுக்காரர் போன்ற எளிமையான தோற்றம் ஆகியவை மக்களிடையே அவரை கொண்டு சென்று சேர்த்தது.
தனது இயக்கத்தில் மட்டுமின்றி, வேறு சில இயக்குனர்களின் படங்களிலும் நடித்து வெற்றி வாகை சூடியுள்ளார். எத்தகைய இறுக்கமான சூழலிலும் பாக்யராஜின் படத்தை பார்த்தால் மனதில் உள்ள பாரத்தை மறந்து பார்வையாளர்களால் சிரிக்க முடியும் என்பதே அவரின் மிகப்பெரிய பலமாகும்.
சமாச்சாரம் என்ற வார்த்தை பிரபலமானதற்கு பாக்யராஜ் மிக முக்கிய காரணகர்த்தா ஆவார். பல இரட்டை அர்த்த வசனங்களை கூட யாரும் முகம் சுழிக்காத வகையில் மிகவும் நாசுக்காக பயன்படுத்தும் திறன் கொண்டவர் ஆவார். பெரும்பாலும் காதல் மற்றும் கணவன் - மனைவி இடையேயான பிரச்னை போன்ற, குடும்பக் கதைகளை மையப்படுத்தியே இவரது படங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது நம்ம ஆளு - பாக்யராஜின் பல மறக்க முடியாத மற்றும் தவிர்க்க முடியாத படங்களின் வரிசையில் இது நம்ம ஆளு திரைப்படத்திற்கு முக்கிய பங்கு உண்டு. வேலையில்லா பட்டதாரி இளைஞர், வயிற்று பிழைப்பிற்காக அக்ரகாரத்தில் குடியேறி, அங்குள்ள உயர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொள்வதை போன்று இப்படம் அமைதிருக்கும். க்ளைமேக்ஸில் சமூகநீதி குறித்து பேசியிருந்தாலும், விழுந்து விழுந்து சிரிப்பதற்கான பல தருணங்கள் இந்த படத்தில் உள்ளன
அவசர போலீஸ் 100: தனது ஆதர்ஷன நாயகனான எம்.ஜி.ஆருக்காக எழுதிய திரைப்படத்தில், தானே இரட்டை கதபாத்திரத்தில் நடித்த திரைப்படம் அவசர போலீஸ் 100. முழுக்க முழுக்க நகைச்ச்சுவையாக வெளியான இப்படத்தில் சில்க் ஸ்மிதா கவனம் ஈர்க்க, எம்.ஜி.ஆரின் கேமியோவை பயன்படுத்திய விதமும் ரசிகர்களை கவர்ந்தது.
ருத்ரா: இந்த திரைப்படத்தில் கைதேர்ந்த திருடனாக பாக்யராஜ் நடித்து இருப்பார். குறிப்பாக வங்கியில் கொள்ளையடிக்கும் சீன், காவல்துறை உயர் அதிகாரியான லட்சுமிக்கு அவர் கொடுக்கும் கவுன்டர்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.
சுந்தர காண்டம்: தான் பயின்ற பள்ளியிலேயே தமிழ் ஆசிரியாக பணிக்கு சேரும் சண்முகமணி, முதல் நாளே அங்கு பயிலும் ப்ரியா என்ற மாணவியால் கேலி செய்யப்பட்டு இருவருக்கும் இடையே முட்டல் மோதல் ஏற்படுகிறது. இதுபோக அவருடன் பயின்ற ஒரு நண்பர் தற்போதும் அதே பள்ளியில் பயில்வது என படத்தின் லூட்டி பார்வையாளர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்
ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி: அரண்மனையில் புதியதாக மேனேஜராக வேலைக்கு செல்லும் பாக்யராஜ், மீனா தான் ராஜகுமாரி என அறியாமல் அவருடன் நக்கல், நையாண்டி செய்து கவனத்தை ஈர்த்து இருப்பார். குறிப்பாக இந்த படத்தில் இடம்பெறும் பாக்யராஜின் பாட்டி கதாபாத்திரம் க்ளைமேக்ஸில் அதகளப்படுத்தி இருக்கும்
பவுனு பவுனுதான்: இளம் வயதிலேயே ஊரை விட்டு வெளியேறிய பாக்யராஜ் ராணுவத்தில் பணிக்கு சேர்கிறார். மீண்டும் ஊருக்கு திரும்புகையில் தனது அடையாளத்தை மறைத்து உறவினர்களுடன் பழக தொடர்கிறார். அப்போது சிறு வயது முதலே தன்னை காதலித்து வரும் பெண்ணுடன் சேர்வதே கதையாக இருக்கும் இதிலும் நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது.
ராசுகுட்டி: பணக்காரக் குடும்பத்தில் பிறந்த பொறுப்பற்ற நாயகன், தனது வாழ்க்கையில் சந்திக்கும் சோதனைகளைத் தாண்டி, எவ்வாறு அன்பையும் மரியாதையையும் வெல்கிறான் என்பதை மிகவும் நகைச்சுவையாக இந்த படம் காட்டியிருக்கும்
மௌனகீதம்: தவறான புரிதல்களால் கணவன் மனைவி இடையே ஏற்படும் சண்டையால் இருவரும் பிரிவது, பின்பு மீண்டும் எப்படி அவர்கள் சேர்கிறார்கள் என்பதே படத்தின் கதையாகும். நகைச்சுவையாக கூறப்பட்டு இருந்தால்லும், இன்றைய தேதிக்கும் இந்த படம் சரியாக பொருந்தும்.
சின்ன வீடு: தான் மணந்த மனைவி தனது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவர் இல்லை என்ற மமதையில் திரிய, அந்த பெண்ணின் உண்மையான நிலையை அறிந்த பிறகு பாக்யராஜின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை நகைச்சுவையாக இந்த திரைப்படம் வெளிக்காட்டி இருக்கும்
இன்று போய் நாளை வா: ஒரு பெண்ணை நண்பர்களான மூன்று பேர் காதலிக்க, அதனால் அவர்களிடையே வரும் மோதல் மற்றும் சூழலை மிகவும் நகைச்சுவையாக இந்த திரைப்படம் மையக்கருவாக கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Kowsalya Tamizhachi





















