TamilsGuide

அவுஸ்திரேலியாவுக்கான விசா கட்டணங்கள் பாரியளவில் அதிகரிப்பு

அவுஸ்திரேலிய அரசாங்கம் பெரும்பாலான விசா பிரிவுகளுக்கான விண்ணப்பக் கட்டணங்களை நேற்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாரியளவில் அதிகரித்துள்ளது.

இந்த விசா கட்டண உயர்வால் சர்வதேச மாணவர்கள், தற்காலிக பட்டப்படிப்பை மேற்கொள்பவர்கள் மற்றும் குடும்பமாக குடியேறுவதற்காக விசாக்களுக்கு விண்ணப்பிப்போர் பெருமளவில் பாதிக்கப்படவுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் புதிய நிதியாண்டின் (2026–2027) ஆரம்பத்துடன் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதற்கமைய, மாணவர் விசா விண்ணப்பக் கட்டணம் 2,500 அவுஸ்திரேலிய டொலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

அத்துடன், தற்காலிக பட்டப்படிப்பு விசா கட்டணம் 5,750 அவுஸ்திரேலிய டொலர்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவுஸ்திரேலியாவில் வசிப்போரின் பங்காளிகள் மற்றும் பெற்றோருக்கான விசா விண்ணப்பக் கட்டணங்கள் 20 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, திறன்சார் குடியேற்றம் மற்றும் நிரந்தரக் குடியிருப்பு விசா பிரிவுகளுக்கான கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.

இந்தக் கட்டண உயர்வு அவுஸ்திரேலியாவில் குடியேற விரும்பும் சர்வதேச மாணவர்கள் மற்றும் குடும்பங்களையே மிக மோசமாகப் பாதிக்கும் என குடிவரவு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், அவுஸ்திரேலியாவுக்கான பல்வேறு விசா வழிகள் தொடர்ந்தும் திறந்தே காணப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

திறன்சார் தொழிலாளர்களின் தேவை, வீட்டுவசதி நெருக்கடி மற்றும் மக்கள் தொகை அதிகரிப்பு ஆகியவற்றை சமநிலைப்படுத்தும் நோக்கில், அவுஸ்திரேலியா தனது குடிவரவு விதிகளை மறுபரிசீலனை செய்து வரும் நிலையிலேயே இந்த விசா கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கு முன்னர் அண்மைக்கால கட்டண விபரங்கள் மற்றும் தகைமைகளைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 

Leave a comment

Comment