TamilsGuide

அமெரிக்காவில் மனிதக் கழிவுகள் நிறைந்த வீட்டில் 16 குழந்தைகள் -- அதிகாரிகள் ஷாக்!

அமெரிக்காவின் ஒஹையோ (Ohio) மாநிலத்தில் மனிதக் கழிவுகள் நிறைந்த வீட்டில் மிகவும் மோசமான மற்றும் சுகாதாரமற்ற சூழலில் 16 குழந்தைகள் வசித்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக குழந்தைகளின் பெற்றோரும், தாத்தா-பாட்டியும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

73 வயதான கேரி சைடர்ஸ் மூத்தவர், 67 வயதான கிறிஸ்டினா சைடர்ஸ், 36 வயதான கேரி சைடர்ஸ் இளையவர் மற்றும் 33 வயதான எலிசபெத் சைடர்ஸ் ஆகியோர் மீது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒஹையோ மாநிலத்தின் ஹாம்டன் (Hamden) என்ற கிராமப்புற பகுதியில் அமைந்திருந்த சிறிய, பழுதடைந்த வீட்டில் 18 மாதங்கள் முதல் 18 வயது வரையிலான 16 சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் மிகவும் மோசமான நிலையில் வாழ்ந்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வீட்டின் பல இடங்களில் மனிதக் கழிவுகளின் தடயங்கள் காணப்பட்டதுடன், சுகாதாரமற்ற மற்றும் தாங்க முடியாத துர்நாற்றம் வீசியதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த வீட்டில் இருந்த குழந்தைகளில் சிலர் உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நால்வரும் காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

குழந்தைகள் தற்போது அரசின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டு, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒஹையோ மாநில அதிகாரிகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் அமெரிக்காவில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பான கண்காணிப்பு நடைமுறைகள் குறித்து மீண்டும் தீவிர கவனத்தை ஈர்த்துள்ளது. 
 

Leave a comment

Comment