இந்த ஆண்டு க.பொ.த. சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை விரைவாக வழங்குவதற்கு, ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் நிரந்தர தேசிய அடையாள அட்டைகளை வழங்கத் திணைக்களம் எதிர்பார்ப்பதாகப் பணிப்பாளர் நாயகம் ஜகத் ஹேரத் தெரிவித்தார்.
சாதாரண தரப் பரீட்சையை எழுதவுள்ள மாணவர்களுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சின் ஊடாகப் பாடசாலைகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை எவ்விதத் தாமதமுமின்றி அனுப்பி வைப்பதை அதிபர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களில், தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தும் அது இன்னும் கிடைக்கப்பெறாதவர்கள், திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் அல்லது மின்னஞ்சல் முகவரிகள் ஊடாகத் தொடர்புகொண்டு தங்கள் அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தேசியப் பரீட்சைகளுக்கு முன்னதாக அனைத்து மாணவர்களிடமும் செல்லுபடியாகும் அடையாள அட்டைகள் இருப்பதை உறுதி செய்வதே இந்த முயற்சியின் நோக்கம் என்றும் ஆட்பதிவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.


