TamilsGuide

தஞ்சம் கோருவோர் 10,000 பவுண்ட் வரை செலுத்த வேண்டும் – பிரித்தானியா அரசு அறிவிப்பு

பிரித்தானியாவில் தஞ்சம் கோருவோர் (Asylum seekers), வேலைவாய்ப்பு பெற்று வருமானம் ஈட்டத் தொடங்கிய பின்னர், அவர்களுக்கு வழங்கப்பட்ட தங்குமிடம் மற்றும் அரசாங்க உதவிகளுக்கான செலவில் இருந்து அதிகபட்சமாக 10,000 பவுண்ட் வரை திருப்பிச் செலுத்த வேண்டிய புதிய திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.

இந்தத் திட்டம் தொடர்பாக பிரித்தானிய உள்துறை அமைச்சர் Shabana Mahmood கருத்து வெளியிடுகையில், குறித்த தொகையை முழுமையாக செலுத்தும் வரை, சம்பந்தப்பட்டவர்கள் நிரந்தர குடியுரிமை நிலைக்கு (settled status) தகுதி பெற முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

புதிய நடைமுறையின் கீழ், பாதிக்கப்படும் பெரியவர்கள், தங்களது வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட வரம்பை கடந்த பின்னர், மாணவர் கடன் திருப்பிச் செலுத்தும் முறையைப் போன்ற வகையில் மாதாந்தம் ஒரு தொகையை செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் தஞ்சம் கோருவோருக்கான தங்குமிடம் மற்றும் ஆதரவு நடவடிக்கைகளுக்காக சுமார் 4 பில்லியன் பவுண்ட் செலவிடப்பட்டுள்ளதாக பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது. இந்த செலவு அதிகமாக இருப்பதாக உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

“தஞ்சம் பெறுவதற்கான உதவி ஒரு உரிமையாகும். ஆனால், அதே நேரத்தில் அது ஒரு பொறுப்பும் ஆகும். எதிர்காலத்தில் பங்களிக்கக்கூடியவர்கள், பிரித்தானிய மக்களின் ஆதரவுக்கு உரிய முறையில் திருப்பிச் செலுத்த வேண்டும்” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் ஏற்கனவே தஞ்சம் தொடர்பான செலவுகளை 1 பில்லியன் பவுண்ட் அளவில் குறைத்துள்ளதாகவும், புதிய நடவடிக்கைகள் மூலம் செலவுகளை மேலும் கட்டுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment