TamilsGuide

ஆப்கான் எல்லையில் தாக்குதல் - முக்கிய தளபதி உட்பட 29 பயங்கரவாதிகளை கொன்றதாக பாகிஸ்தான் அறிவிப்பு

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள சிந்து ரேஞ்சர்ஸ் துணை ராணுவ தலைமையகத்தின் மீது நேற்று முன் தினம் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 4 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

தெஹ்ரிக் இ தாலிபான் பயங்காரவாத அமைப்பின் பிரிவான 'ஜமாத்-உல்-அஹ்ரார்' அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக 6 பயங்கரவாதிகளை கொன்றதாக பாகிஸ்தான் அறிவித்திருந்தது.

இந்நிலையில் பயங்கரவாதிகள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள பாகிஸ்தான் ராணுவம் நேற்று பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் மேற்கொண்ட அதிரடி தாக்குதலில் முக்கிய தளபதி உட்பட 29 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

பாகிஸ்தானின் தகவல் துறை அமைச்சர் அதாவுல்லா தாரார் இதுகுறித்து கூறுகையில்,

உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், ஆப்கானிஸ்தான் எல்லையிலுள்ள பஜௌர் மாவட்டத்தில் ராணுவத்தின் தரைவழி தாக்குதலில் மிகவும் தேடப்படும் தளபதி கான் பரோஷ் உட்பட மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பின்னர், பாகிஸ்தான் விமானப்படை ஆப்கானிஸ்தான் எல்லை மாகாணங்களான பக்தியா, பக்திகா மற்றும் குனார் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியமான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

இந்தத் தாக்குதல்களில் மேலும் 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் ஆயுதக் கிடங்குகள் அழிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தனது நாட்டில் தாக்குதல்களை நடத்தும் தெஹ்ரிக் இ தாலிபான் பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் தலிபான் அரசாங்கம் அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம் சாட்டியுள்ள நிலையில் இந்த தாக்குதல் இரு நாடுகள் இடையே மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கடந்த பிப்ரவரியில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. பின்னர் கத்தார் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் சமாதான பேச்சுவார்தையால் அமைதி திரும்பிய நிலையில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
 

Leave a comment

Comment