பிரித்தானியாவில் நிலவி வரும் கடும் வெப்பநிலை தொடர்ந்து மூன்றாவது நாளாக புதிய வெப்ப அளவு பதிவாகியுள்ளது. பிரித்தானியாவில் நேற்றும் பல பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக அதிகமான வெப்பம் நிலவியதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
அதிக வெப்பத்தினால் உடல்நல பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் அதிகளவில் தண்ணீர் அருந்தவும், நேரடி வெயிலில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எனினும், இன்றிலிருந்து வானிலையில் மாற்றம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளன. நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயமும் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடும் வெப்பத்துக்குப் பின்னர் திடீர் வானிலை மாற்றம் ஏற்படுவதால், பலத்த காற்று, மின்னல் மற்றும் குறுகிய காலத்தில் அதிக மழைப்பொழிவு போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் வானிலை மாற்றங்களை மக்கள் தொடர்ந்து கண்காணிக்குமாறும், குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் கூடுதல் கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை பிரித்தானியாவில் ஜூன் மாதத்தில் பதிவாகும் இந்த அதிக வெப்பநிலை, காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் தொடர்பான விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.


