TamilsGuide

மயிலிட்டி மற்றும் பலாலி பகுதியில் அறவழிப் போராட்டம்

மயிலிட்டி மற்றும் பலாலி பகுதியில் உள்ள 2200 ஏக்கர் காணியை விடுவிக்க கோரி மக்கள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மயிலிட்டி சந்திக்கும் ஹோமண்டோஸ் பங்களாவிற்கு முன்பாக இன்று (26) காலை 9 மணியளவில் 10வது வாரமாக நடைபெற்று வருகின்றது.

மயிலிட்டி பகுதியில் உள்ள தனியார் காணிகள் மற்றும் 21 இந்து கிறித்தவ ஆலயங்களை வழிபடுவதற்கான அனுமதிகளை வழங்க கோரி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 36 வருடங்களுக்கு மேலாக சொந்த நிலங்களில் வாழும் உரிமையை இழந்துள்ள போதிலும், பொது மக்களுக்கு பாதுகாப்பை வழங்கி தமது நிகழ்வுகளை நடாத்தும் இராணுவத்தினர்,  செபஸ்தியார் கோவில் மற்றும் காணிக்கை மாதா கோவில்களுக்கு மக்கள் சென்று வழிபட அனுமதிக்காமைக்கான காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அநுர அரசாங்கம் மக்களின் காணிகள் மக்களுக்கே என்று கூறி ஆட்சிக்கு வந்த போதிலும் இதுவரை மக்களின் காணிகளை ஏன் விடுவிக்க வில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மயிலிட்டி மக்களின் காணிகளை விடுவிக்க கோரிக்கை விடுத்துள்ளதுடன், விடுவிக்க தவறினால் போராட்டத்தை பாரியளவில் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அண்மையில் யாழ் மாவட்ட செயலகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த போதிலும்,  காணி விடுவிக்கும் வரை தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
 

Leave a comment

Comment