TamilsGuide

20,000 உக்ரைனிய குழந்தைகளை கடத்திய புட்டின் - Olena Zelenska சர்வதேசத்திடம் முன்வைத்த கோரிக்கை

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் தீவிரமாக நீடித்து வரும் சூழலில், ரஷ்யப் படைகளால் உக்ரைனிலிருந்து சுமார் 20,000 குழந்தைகள் சட்டவிரோதமாகக் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக உக்ரைனின் முதல் பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்கா (Olena Zelenska) சர்வதேச ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் வெறும் புள்ளிவிவரம் சார்ந்தது அல்ல என்றும், இது உக்ரைனின் ஒட்டுமொத்த எதிர்கால தலைமுறையை அழிக்கும் மிகப்பெரிய மனிதநேயப் பேரழிவு என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

தங்களின் சொந்த தாய்நாட்டிலிருந்து பிரிக்கப்பட்ட இந்தக் குழந்தைகளை மீண்டும் அவர்களது குடும்பங்களுடன் சேர்க்க உலக நாடுகள் உடனடியாக தலையிட்டு உதவ வேண்டும் என்றும் ஒலேனா ஜெலென்ஸ்கா (Olena Zelenska) கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிகாரப்பூர்வமாக ஆவணப்படுத்தப்பட்ட தரவுகளின்படி, குறைந்தது 20,000 உக்ரைனியக் குழந்தைகள் ரஷ்யாவிற்கும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கும் கட்டாயமாக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அவ்வாறு கடத்தப்பட்ட குழந்தைகள் அங்குள்ள தற்காலிக முகாம்களிலும், பள்ளிகளிலும் அடைக்கப்பட்டு, அவர்களின் உக்ரைனிய அடையாளங்கள் முற்றிலும் சிதைக்கப்படுவதாக ஒலேனா ஜெலென்ஸ்கா சுட்டிக்காட்டியுள்ளார்.

கடத்தப்பட்ட குழந்தைகள் உக்ரைனிய மொழியில் பேசுவதற்கோ, தங்களது கலாச்சாரத்தைப் பின்பற்றுவதற்கோ அல்லது உக்ரைனில் உள்ள தங்களது பெற்றோரைத் தொடர்பு கொள்வதற்கோ ரஷ்யா முற்றிலும் தடை விதித்துள்ளதாக அவர் வேதனை பகிர்ந்துள்ளார்.

ரஷ்யாவின் இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு பின்னால் மிக மோசமான அரசியல் பிரச்சார உத்திகள் இருப்பதாக உக்ரைன் தரப்பு சாடுகிறது. உக்ரைனியக் குழந்தைகளை ரஷ்யா தங்களின் போர்க் கைதிகளைப் போலவும், ஒரு பண்டமாற்றுப் பொருளைப் போலவுமே நடத்துகிறது என்பதை அமைதி பேச்சுவார்த்தைகளின் போது ரஷ்யப் பிரதிநிதிகள் நடந்துகொண்ட விதம் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.

அதேவேளை உக்ரைன் தூதரகக் குழுவினர் சரிபார்க்கப்பட்ட பட்டியலில் இருந்த 300 குழந்தைகளை முதலில் திருப்பி அனுப்புமாறு கோரியபோது, அவர்களைப் போர்க் கைதிகளின் பரிமாற்றப் பட்டியலில் சேர்க்குமாறு ரஷ்யா மிகக் கொடூரமாக நிபந்தனை விதித்ததாக ஜெலென்ஸ்கா குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குழந்தைகளைத் தாயகம் அழைத்து வருவதற்காக உக்ரைன் அரசு ‘பிரிங் கிட்ஸ் பேக் யுஏ’ (Bring Kids Back UA) போன்ற சர்வதேச கூட்டமைப்புகளை உருவாக்கி தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

பல்வேறு சர்வதேச நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் கூட்டு முயற்சியால் இதுவரை சுமார் 2,000 குழந்தைகள் மட்டுமே மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

எனினும், பெரும்பான்மையான குழந்தைகள் இன்னும் ரஷ்யாவின் பிடியிலேயே இருப்பதால், சர்வதேச நீதிமன்றத்தின் பிடியாணை உத்தரவுகளைத் தாண்டி, உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ரஷ்யாவிற்குப் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான அழுத்தங்களை அதிகரிக்க வேண்டும் என ஒலேனா ஜெலென்ஸ்கா வலியுறுத்தியுள்ளார்.


 

Leave a comment

Comment