TamilsGuide

ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலை - பிரான்சில் 40 பேர் நீரில் மூழ்கி பலி

பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் வெப்பநிலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

வரலாறு காணாத வெப்ப அலை காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஈபிள் கோபுரம் உட்பட அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.

உலக சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமான வெப்ப அலையால் ஐரோப்பா தத்தளித்து வருவதாக உலக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாயன்று பிரான்சில் 44.3 டிகிரி செல்சியஸ் என்ற சாதனை அளவிலான அதிகபட்ச வெப்பநிலை பதிவானது.

அங்குள்ள 58 மாகாணங்களுக்கு நேற்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

வெப்பத்திலிருந்து தப்பிக்க மக்கள் ஆறுகளிலும் கால்வாய்களிலும் குளித்து நேரம் கழித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரத்தில் மட்டும் பிரான்சில் வெவ்வேறு இடங்களில் வெப்பத்திலிருந்து தப்பிக்க நீரிநிலைகளில் இறங்கிய மக்களில் 40 பேர் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு அறிவித்துள்ளார்.

இதில் பெரும்பாலானோர் இள வயதினர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளில் ஐரோப்பா முழுவதும் வெப்பம் தொடர்பான காரணங்களால் 200,000 மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் அதில் பெரும்பாலானவற்றை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தடுத்திருக்க முடியும் எனவும் ஐரோப்பாவில் உள்ள உலக சுகாதார அமைப்பு அலுவலகம் இந்த மாதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment