TamilsGuide

பாக். முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்து பேசிய ஈரான் அதிபர்

ஈரானிய அதிபர் மசூத் பெசஸ்கியான் செவ்வாய்க்கிழமையன்று பாகிஸ்தானின் உயர்மட்ட சிவில் மற்றும் ராணுவத் தலைவர்களைச் சந்தித்து, பிராந்திய நிலவரங்கள் மற்றும் அமெரிக்கா சம்பந்தப்பட்ட அமைதி முயற்சிகள் குறித்து விவாதித்தார்.

ஒரு நாள் பயணமாக பாகிஸ்தான் வந்தடைந்த பெசஸ்கியான், அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோருடன் தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பயணம்:

தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அதிபர் பெசஸ்கியானுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் ஷெரீப், "அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தம் பிராந்தியத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும்," என்று கூறினார்.

சுவிட்சர்லாந்தில் அமெரிக்காவுடன் ஈரான் பேச்சுவார்த்தை நடத்தி, 60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான செயல் திட்டம் குறித்து இரு தரப்பும் ஒப்புக்கொண்ட சில நாட்களுக்கு பிறகு இந்த பயணம் அமைந்துள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்:

கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் ஏரி உச்சிமாநாட்டில் (Lake Lucerne Summit) நடைபெற்ற இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள், பிராந்திய பாதுகாப்பு மற்றும் பிற சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கையெழுத்தான 'இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்' (MoU) கட்டமைப்பின் கீழ் நடைபெற்றன.

மேற்கு ஆசியாவில் அமைதியை மீட்டெடுக்கவும், பிராந்திய பாதுகாப்பு மற்றும் பிற சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் அமெரிக்காவும் ஈரானும் வியாழக்கிழமையன்று இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
 

Leave a comment

Comment