அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை 2025/2026 முடிவுகள், பல சாதனைகளையும் நெகிழ்ச்சியான கதைகளையும் நாட்டுக்குக் கடத்தியுள்ளன.
அந்த வகையில், தலைநகரத்தின் கல்விப் பரப்பில் அனைவரினதும் கவனத்தையும் ஈர்த்துள்ளது கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலய மாணவி செல்வி ஞானபிரசாந்தன் கிஷோரி சாயீஷனியின் சாதனையும் அமைந்துள்ளது.
பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ முடிவுகளின்படி, தோற்றிய அனைத்துப் பாடங்களான சைவ சமயம், தமிழ் மொழியும் இலக்கியமும், ஆங்கில மொழி, கணிதம், வரலாறு, அறிவியல், சங்கீதம் (கர்நாடகம்), வர்த்தகமும் கணக்காய்வு கல்வியும், சுகாதாரமும் உடற்கல்வியும் ஆகிய ஒன்பது பாடங்களிலும் மிகச்சிறந்த ‘9A’ உயர்தர சித்திகளைப் பெற்று பாடசாலைக்கும் தனது குடும்பத்திற்கும் பெரும் பெருமையைத் தேடித்தந்துள்ளார் கிஷோரி.
கிஷோரியின் இந்த வெற்றியின் பின்னணியில் ஒரு மிக முக்கியமான உந்துசக்தி இருக்கிறது.
அவர், கொழும்பின் ஊடகத்துறையில் நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் ஒரு சிரேஷ்ட ஊடகவியலாளரான சந்திரகாசன் ஞான பிரசாந்தனின் புதல்வி ஆவார்.
நாட்டின் அன்றாட அரசியல், விளையாட்டு, வணிகம் மற்றும் சமூகப் பிரச்சினைகளைத் தனது காணொளி, புகைப்படங்கள் மற்றும் செய்திகளாலும் சமூகத்திற்குக் கடத்தும் ஒரு ஊடகவியலாளரின் பணி என்பது நேரக் கட்டுப்பாடற்றது, சவால்கள் நிறைந்தது.
நள்ளிரவு என்றும் அதிகாலை என்றும் பாராது, செய்தி அறைகளிலும் களங்களிலும் மக்களின் குரலாக ஒலிக்கும் தந்தையின் அர்ப்பணிப்பைக் கண்டு வளர்ந்த கிஷோரிக்கு, அந்தத் தீவிர உழைப்பே தனது கல்வியிலும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.
அப்பா எப்போதுமே சமூகத்தில் நாம் நிமிர்ந்து நிற்பதற்குக் கல்விதான் மிகச்சிறந்த ஆயுதம் என்று கூறுவார் எனவும், செய்திச் சேகரிப்புகளுக்காக அவர் எதிர்கொள்ளும் சவால்களைப் பார்க்கும் போது, எனக்காக அவர் படும் பிரயத்தனத்திற்கு நான் கொடுக்கும் ஆகச்சிறந்த பரிசு இந்த ‘9A’ சித்திகள்தான் என்று எனக்குத் தெரியும் எனவும் கிஷோரி புன்னகையுடன் கூறுகிறார்.
இந்த சாதனைப் பயணம் அத்தனை சுலபமானதாக இருக்கவில்லை. கடந்த காலங்களில் ஏற்பட்ட கடுமையான காலநிலை மாற்றங்கள், வெள்ளப் பெருக்குகள் காரணமாக இவர்களது இல்லமும், தந்தையின் இலத்திரனியல் மற்றும் ஊடகத் தளவாடங்களும் சேதமடைந்த சவாலான காலகட்டங்களை இந்தக் குடும்பம் கடந்து வந்துள்ளது.
பொருளாதார நெருக்கடிகளும், வாழ்வாதாரச் சவால்களும் சூழ்ந்திருந்த நிலையிலும், தனது மகளின் கல்வியே முதன்மையானது என்பதில் அந்த ஊடகவியலாளர் தந்தை உறுதியாக இருந்தார்.
தந்தையின் அந்த அசைக்க முடியாத நம்பிக்கையை கிஷோரி இன்று ஒன்பது ‘A’ சித்திகளாக மாற்றிக் காட்டியுள்ளார்.
இந்த வரலாற்றுச் சாதனை குறித்து ஊடகங்களுக்குக் கருத்துப் பகிர்ந்து கொண்ட பாடசாலை அதிபர் கிருஷ்ணவதனி அம்மையார், எமது பாடசாலை கொழும்பு மத்தியில் அமைந்துள்ள ஒரேயொரு பெண்கள் இந்து பாடசாலையாகும் எனக் குறிப்பிட்டதுடன், மாணவி கிஷோரி சாயீஷனி 9A சித்திகளைப் பெற்று பெரும் பெருமை சேர்த்துள்ளார் என்றார்.
அத்துடன், பரீட்சைக்குத் தோற்றிய ஏனைய மாணவிகளும் சகல பாடங்களிலும் 75% இற்கும் அதிகமான சித்திகளைப் பெற்றுத் தந்துள்ளதாகவும், குறிப்பாக வர்த்தகம், கர்நாடக சங்கீதம் ஆகிய பாடங்களில் 100% சித்திகளை எமது மாணவிகள் பெற்றுத் தந்துள்ளதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இந்த வெற்றிக்குக் காரணமான சகல ஆசிரியர்களுக்கும், உறுதுணையாக இருந்த பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்த அதிபர், சித்தியடைந்த அனைத்து மாணவிகளும் உயர்தரப் பரீட்சையிலும் சிறந்த பேறுகளைப் பெற வாழ்த்தினார்.
தொடர்ந்து தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட சாதனை மாணவி கிஷோரி சாயீஷனி, ”நான் தரம் ஒன்று முதல் சாதாரண தரம் வரை இப்பாடசாலையிலேயே கல்வி பயின்றேன் என்றும், 9 பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த எனது பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் எனது நன்றிகள் என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும் எனக்கு அனைத்துப் பாடங்களிலும் உதவி செய்த ஆசிரியர்களுக்கும், பாடசாலை அதிபர் கிருஷ்ணவதனி அம்மையார், முன்னாள் அதிபர் சாந்தினி அம்மையார் மற்றும் எனது வகுப்பாசிரியர் மங்கையற்கரசி அம்மையார் மற்றும் எனது ஆரம்பப் பிரிவு ஆசிரியையான லக்ஷ்மி அம்மையார் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும், உயர்தரத்திலும் நன்றாகக் கல்வி கற்று சிறந்த பெறுபேறுகளைப் பெறுவேன் என்றும் உறுதியளித்தார்.
கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலயம், தலைநகரின் மையப்பகுதியில் பெண் பிள்ளைகளின் கல்விக்குச் செய்து வரும் அர்ப்பணிப்பு கிஷோரியின் இந்த வெற்றியின் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஊடகத்துறையின் சவால்களையும், சமூகத்தின் தேவைகளையும் மிக நெருக்கத்திலிருந்து பார்த்த கிஷோரிக்கு, அதிபர் மற்றும் ஆசிரியர்களின் வாழ்த்துகளோடு தனது உயர்தரக் கல்வியிலும் சாதனை படைத்து, நாட்டின் உயரிய துறை ஒன்றில் இணைந்து சமூகத்திற்குச் சேவை செய்ய வேண்டும் என்ற உன்னத இலட்சியம் உள்ளது.
ஒரு சிரேஷ்ட ஊடகவியலாளர் குடும்பத்திலிருந்து புறப்பட்டு, அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் இருந்தால் தலைநகரின் எந்தவொரு சவாலான சூழலிலும் சிகரத்தைத் தொடலாம் என நிரூபித்துள்ள செல்வி கிஷோரி சாயீஷனிக்கு எமது ஊடகக் குடும்பத்தின் வாழ்த்துகள்!


