சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணியாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, அவர்கள் வரும் ஜூன் 24 முதல் 30 வரையிலான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தருவார்கள் எனக் கூறப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது, நாட்டின் சமீபத்திய பொருளாதார வளர்ச்சியை மதிப்பிடுவதற்கும், இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் எதிர்பார்ப்பதாக தெரியவருகிறது.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதிக்கான ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளை நிறைவு செய்து, அதற்கான அனுமதியை நாணய நிதியத்தின் நிர்வாகச் சபை கடந்த மே மாதம் 27 ஆம் திகதி வழங்கியிருந்தது.
இதற்கமைய, இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதற்காக 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி இலங்கைக்குக் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


