உடனடி போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவுக்கும் ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இலங்கை வரவேற்றுள்ளது.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இலங்கையின் வெளிவிகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு,
ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறத்தல் மற்றும் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதற்கான கட்டமைப்பை உருவாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் பதட்டத்தைத் தணிப்பதற்கும் நீண்டகால பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மையை அடைவதற்கும் இந்த போர்நிறுத்தம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதாக – குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இராஜதந்திர வழிகள் மூலம் கருத்து வேறுபாடுகளுக்கு அமைதியான தீர்வு காண்பதை இலங்கை உறுதியாக ஆதரிப்பதாகவும், இம்முயற்சி இப்பகுதி முழுவதும் நிலையான அமைதியை வளர்க்கும் என்று நம்புவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இராஜதந்திர ரீதியிலான இந்த முடிவை அடைவதில் முக்கிய பங்காற்றிய பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு மற்றும் கட்டார் அரசு ஆகியவற்றிற்கும், அத்துடன் இதற்கான ஆதரவை வழங்கிய அனைத்துப் பங்காளிகளுக்கும் இலங்கை தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


