2026 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய அமைச்சு மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் விசேட கொள்கை ரீதியான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது குறித்த மீளாய்வுக் கூட்டம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் நேற்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் அந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி, டிஜிட்டல் பொருளாதாரம், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசனம், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி, வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை, பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு, சுற்றாடல், வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் ஆகிய அமைச்சுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து இங்கு தனித்தனியாக கலந்துரையாடப்பட்டது.
தொடர்புடைய அனைத்து தரப்பினரும் இணைந்து கலந்துரையாடி, எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகாண வேண்டியதன் அவசியத்தை இங்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதியின் செயலாளர், உரிய திட்டங்களை விரைவுபடுத்தி அதன் பயன்களை மக்களுக்கு வழங்குவது அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும் வலுசக்தி அமைச்சின் செயலாளருமான ரசல் அபொன்சு, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் அயேஷா ஜினசேன, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.டி.டி. விக்ரமசிங்க, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் செயலாளர் எம்.ஏ.எல்.எஸ்.என்.கே. மந்திரிநாயக்க, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கே.ஆர். உடுவாவல, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் பதில் செயலாளர் டி.டி. பத்திரணகே, நிதி ஆணைக்குழுவின் தலைவர் சுமித் அபேசிங்க ஆகியோருடன், சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் மேலதிக செயலாளர்கள் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.


