நேற்றையதினம் (17) தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகே கார் ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த பெண் ஜூன் 3 ஆம் திகதி முதல் ஜூன் 16 ஆம் திகதி வரை நுவரெலியா பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் உயிரிழந்த பெண்ணின் காதலன் என நம்பப்படும் நபரே, சடலம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை, வெலிகம பகுதியை சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் பிரேதப் பரிசோதனைக்காக தெல்தெனிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது கொலையா அல்லது வேறு விதத்தில் நிகழ்ந்த மரணமா என்பதை கண்டறிவதற்காக நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், நுவரெலியாவில் உள்ள ஒரு விடுதியில் இருந்து, இறந்த பெண்ணை அவரது காதலன் என நம்பப்படும் நபர் தூக்கிச் செல்லும் சிசிரிவி காட்சிகளும் இப்போது வௌியாகியுள்ளன.
இந்த நிலையில் பொலிஸார் சம்பவம் குறித்த விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.


