TamilsGuide

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை தடையின்றி நடக்க வலியுறுத்தி போராட்டம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை சுதந்திரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் குற்றவாளிகளுக்கு சட்டத்தினால் சரியான தீர்ப்புகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தக்கோரியும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை கண்டித்தும் இன்று மட்டக்களப்பில் அமைதியான முறையில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் இணைப்பாளர் புஹாரி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் மக்கள் தாக்குதலின் பின்னர் பாதிக்கப்பட்ட மக்கள்,சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள்,மதத்தலைவர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் கோரிக்கைகள் முன்வைக்கப்படும் வகையிலும் மூன்று மொழிகளிலும் எழுதப்பட்ட பதாகைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான அரசாங்கத்தின் விசாரணைகள் எந்தவித அரசியல் தலையீடுகளும் இன்றி, சுதந்திரமான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

விசாரணைகளை திசைதிருப்பும் முயற்சிகளுக்கு கண்டனம் இதன்போது கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன் பல்வேறு கோரிக்கைகளும் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டன.

இந்த பயங்கரவாதச் செயலுடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தகுந்த தட்டனை வழங்கப்பட வேண்டும். அத்துடன் நீதிமன்றத்தின் ஊடாக இந்த விசாரணை நடைமுறைகள் துரிதப்படுத்தப்பட்டு, தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்பட வேண்டும்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சாட்சிகளாகக் கருதப்படும் சுரேஷ் சாலி மற்றும் பிள்ளையான் போன்றவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

அவர்கள் மூலமாக உண்மைகளும் ஆதாரங்களும் சட்டப்பூர்வமாகத் திரட்டப்பட வேண்டும்.

இந்தத் தாக்குதலினால் உடல் மற்றும் உள ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்குத் தேவையான வாழ்வாதார, பொருளாதார மற்றும் சமூக ரீதியான உதவிகளை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும்.

கடந்த காலங்களில் எந்தவித குற்றச்சாட்டுகளும் இன்றி நீண்ட காலம் சிறை வைக்கப்பட்டு, தற்போது விடுதலையாகியுள்ள அப்பாவி முஸ்லிம் மக்கள் மீதான புலனாய்வுப் பிரிவினரின் தொடர் கண்காணிப்புகள், விசாரணைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

குற்றம் செய்தவர்கள் எந்தவொரு இனத்தைச் சேர்ந்தவர்களாக அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்பட்டு தண்டிப்பட வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.
 

Leave a comment

Comment