TamilsGuide

வெள்ளை மாளிகையை இலக்கு வைத்து நடத்தவிருந்த தொடர் தாக்குதல் முறியடிப்பு

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை இலக்கு வைத்து நடத்தவிருந்த தொடர் கொடூரத் தாக்குதல்களை அமெரிக்காவின் எஃப்.பி.ஐ (FBI) நிறுவனம் முறியடித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வெள்ளை மாளிகையில் நடத்தவிருந்த தற்காப்புக் கலை போட்டித் தொடரை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உப ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இலோன் மஸ்க் போன்ற முக்கிய பிரமுகர்களே இந்தத் தாக்குதல்தாரர்களின் இலக்காக இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

தாக்குதல்தாரர்கள் வெடிபொருட்களை ஏற்றிய ட்ரோன்களைப் பயன்படுத்தி, இந்தத் தொடரைக் காண வருகை தரும் பெருந்திரளான மக்களை இலக்கு வைத்து கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

கிடைக்கப்பெற்ற உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் களமிறங்கிய பாதுகாப்புப் பிரிவினர், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்பாகவே அதனுடன் தொடர்புடைய 5 சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டிருந்த அதே நாளில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 80ஆவது பிறந்தநாள் கொண்டாட்டமும் அமைந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

 இருப்பினும்,   இந்த நிகழ்வில் டொனால்ட் ட்ரம்ப், உப ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இலோன் மஸ்க் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment