கொட்டகலை, பத்தனை சந்திக்கு அருகிலுள்ள ஹட்டன்–நுவரெலியா பிரதான வீதியில் மண்சரிவு அபாயம் உள்ள பகுதியிலிருந்து பல மரங்கள் சாலையில் சரிந்து விழும் அபாயம் உள்ளமையினால் அப் பகுதியூடான போக்குவரத்து நடவடிக்கைகள் ஒருவழிப் பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதான வீதிக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தலை மதிப்பிட்ட பின்னர், வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) நேற்று (14) இந்த கட்டுப்பாட்டை அமுல்படுத்தியது.
மண்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு மேலே உள்ள குன்றின் உச்சியில் காணப்படும் பல யூகலிப்டஸ் (eucalyptus) மரங்களின் வேர்கள் வெளிப்பட்டிருப்பதால், தற்போது அப்பகுதியில் நிலவும் பலத்த காற்று மற்றும் மோசமான வானிலை காரணமாக அந்த மரங்கள் சாலையின் மீது சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அபாயகரமான சூழ்நிலை குறித்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டு, ஆபத்தான மரங்களை அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், நிரந்தரத் தீர்வு இன்னும் வழங்கப்படவில்லை என்று அவர்கள் கவலை வெளியிட்டனர்.
மரங்கள் சரிந்து விழுவதால், அந்தச் வீதியில் பயணிக்கும் பயணிகளுக்கும் வாகனங்களுக்கும் கடுமையான அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்றும், அதன் விளைவாகக் காயங்களும் கணிசமான சொத்துச் சேதங்களும் உண்டாகலாம் என்றும் அப்பகுதி மக்கள் மேலும் எச்சரித்தனர்.


