TamilsGuide

எதிர்கால மின்சாரத் தேவைக்கு தீர்வு - வலுசக்தி களஞ்சியப்படுத்தல் திட்டம்

புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை உகந்த முறையில் பெற்றுக்கொள்வதற்கே வலுசக்தி களஞ்சியப்படுத்தல் முறைமைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அசித்த நிரோஷன எகொடவிதான எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலேயே பிரதமர் நாடாளுமன்றத்தில்  இன்று இதனை தெரிவித்தார்.

2030 ஆம் ஆண்டளவில் தேசிய மின்சார உற்பத்தியில் 70 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்கள் வாயிலாகப் பெற்றுக்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த இலக்குகளை அடைவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகாரசபையின் 2025/ 2030 புதுப்பிக்கத்தக்க அபிவிருத்தித் திட்டத்திற்கமைய காற்றுச் சக்தி மூலம் 1264 மெகாவோட் மற்றும் சூரிய சக்தி மூலம் 2071 மெகாவோட் என பல்வேறு கொள்முதல் முறைகளின் கீழ் தேசிய கட்டமைப்பில் உள்வாங்குவதற்கு திட்டமிடப்பட்டிருக்கின்றது.

புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை உள்வாங்குவதற்காகத் தேசிய மின்சாரப் பரிமாற்ற மற்றும் விநியோகக் கட்டமைப்பை விரிவுபடுத்தும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அரசாங்கம் என்ற வகையில் முன்னெடுக்கப்படும் மிக முக்கியமான நடவடிக்கையாக புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை உகந்த முறையில் பெற்றுக்கொள்வதற்காகப் புதிய வலுசக்தி சேமிப்பு முறைமைகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

தற்போது உபயோகத்தில் இருக்கின்ற நீர்மின் நிலையங்களின் நிறுவப்பட்ட கொள்ளளவை மேம்படுத்துவதற்கான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதையும் பிரதமர் வலியுறுத்தினார்.
 

Leave a comment

Comment