பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நாடாளுமன்றத்தில் தனி நபர் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
இந்தப் பிரேரணை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் பட்டியலிடப்பட்டுள்ள போதிலும், இதுவரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
கடந்த 1979ஆம் ஆண்டில் தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம், தன்னிச்சையான கைதுகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் வழிவகுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தச் சட்டத்தை வெறும் திருத்தங்களுக்கு உட்படுத்துவதோ அல்லது புதிய பெயரில் மாற்றுவதோ தீர்வாகாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நல்லிணக்கம் மற்றும் ஜனநாயக ஆட்சியை வலுப்படுத்தும் நோக்கில், இந்தச் சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கான அரசியல் உறுதிப்பாட்டை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்றும், அனைத்துக் கட்சிகளும் இதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.


