TamilsGuide

பாதுக்கை விகாரையின் ஒலிப்பதிவுக்கூடம் உடைத்து 1.5 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் திருட்டு

பாதுக்கை, மாதுலாவ பகுதியில் உள்ள ஸ்ரீ சுதர்மாராம விகாரையின் பௌத்த பாடல்களைப் (கவி பண) பதிவு செய்யும் ஒலிப்பதிவுக்கூடத்தை உடைத்து, அங்கிருந்த சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான கணினிகள் உள்ளிட்ட ஒலிப்பதிவு உபகரணங்களைத் திருடிய நபர் ஒருவரைப் பாதுக்கை பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பாதுக்கை, வட்டரெக ஜயமுதுகம பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விகாரையின் தேரர் ஒருவரால் பாதுக்கை பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட உத்தியோகபூர்வ முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் ஒலிப்பதிவுக்கூடத்திலிருந்து பொருட்களைத் திருடிய பின்னர், அவற்றை வேறொரு நபருக்கு விற்பனை செய்திருந்தார்.

எனினும், பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டு விற்கப்பட்ட அனைத்து உபகரணங்களையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில், சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுக்குக் கடுமையாக அடிமையானவர் என்பது தெரியவந்துள்ளது.

அவர் கைது செய்யப்படும் போது, அவரது வசமிருந்த ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தனது போதைப்பொருள் தேவைக்கான பணத்தைத் திரட்டும் நோக்கிலேயே அவர் இந்த விகாரைத் திருட்டில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கும், திருடப்பட்ட பொருட்களை நீதிமன்றத்தில் சான்றுகளாகச் சமர்ப்பிப்பதற்கும் பாதுக்கை பொலிஸார் மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment