TamilsGuide

வெவண்டன் தமிழ் வித்தியாலயத்திற்குப் பாதுகாப்பான இடத்தில் புதிய கட்டிடம் கோரி பெற்றோர்கள் போராட்டம்

கொத்மலை கல்வி வலயத்திற்குட்பட்ட வெவண்டன் தமிழ் வித்தியாலய மாணவர்களின் பெற்றோர்களால், றம்பொடை தொண்டமான் கலாச்சார மண்டபத்திற்கு அருகில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கடந்த ‘திட்வா’ புயலின் போது ஏற்பட்ட மண்சரிவு அபாயம் காரணமாக, வெவண்டன் தோட்டம் மக்கள் வசிப்பதற்கு உகந்த பகுதியல்ல என மண் பரிசோதனை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதனையடுத்து, வெவண்டன் தமிழ் வித்தியாலய மாணவர்கள் தற்காலிகமாக றம்பொடை தொண்டமான் கலாச்சார மண்டபத்தில் தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், தற்போது குறித்த மாணவர்களை றம்பொடை தொண்டமான் கலாச்சார மண்டபத்திலிருந்து நீக்கி, அருகில் உள்ள ஏனைய பாடசாலைகளுக்கு அனுப்ப கொத்மலை கல்வி வலயம் தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள பெற்றோர்கள், “தமது பிள்ளைகளைத் தூரத்திலுள்ள அயல் பாடசாலைகளுக்கோ அல்லது வேறு இடங்களுக்கோ அனுப்ப முடியாது” எனத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், தமது கிராமத்திற்கு அருகிலேயே பாதுகாப்பானதொரு இடத்தில் புதிய பாடசாலைக் கட்டிடத்தை அமைத்துத் தருமாறும் அவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுரவீர, நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் துஷாரி தென்னகோன், பிரதேச செயலாளர் நதீர லக்மால் மற்றும் மண் பரிசோதனை அதிகாரி புத்திக பண்டார விஜயகோன் உள்ளிட்ட குழுவினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் வருகை தந்தனர்.

பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்ட அதிகாரிகள், இப்பிரச்சினைக்கான தீர்வினை விரைவில் பெற்றுத் தருவதாக உறுதியளித்தனர்.

மேலும், இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றி உரிய கவனத்தை ஈர்க்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுரவீர இதன்போது தெரிவித்தார்.
 

Leave a comment

Comment