செயல்பாட்டில் இல்லாத ஒரு மத்திய அரசு மானியத் திட்டத்தின் பெயரைப் பயன்படுத்தி, வீடு வீடாகச் சென்று மோசடியில் ஈடுபட முயன்ற டொராண்டோவைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்து, அவர் மீது மோசடி முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கனடாவின் நார்த் பே பிராந்தியத்திலுள்ள 'பிர்ச் ஹேவன்' குதியில் கடந்த பிப்ரவரி 20-ஆம் திகதி காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிடிபட்ட நபர், அங்குள்ள ஒரு குடியிருப்புக்குச் சென்று தான் ஒரு முன்னணி எரிசக்தி நிறுவனத்தின் பிரதிநிதி என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். அங்கு வசிப்பவர்களிடம், கனடா அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் அதிகாரப்பூர்வ 'வீட்டு எரிசக்தி பாதுகாப்பு திட்டத்தின்' கீழ் தமக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
மேலும், தங்களின் வீட்டு உபயோகப் பொருட்களை மாற்றினால் 5,000 டொலர் முதல் 10,000 டாலர் வரை அரசு மானியம் பெற்றுத் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
குறித்த நபர் குறிப்பிட்ட மத்திய அரசின் 'வீட்டு எரிசக்தி பாதுகாப்பு திட்டம்' பல ஆண்டுகளுக்கு முன்பே முழுமையாக நிறைவடைந்து, தற்போது செயல்பாட்டில் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற வீடு தேடி வரும் மோசடி நபர்களிடம் இருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள நார்த் பே பொலிஸார் சில முக்கிய வழிமுறைகளை வழங்கியுள்ளனர்.
ஏதேனும் ஒரு நிறுவனம் அல்லது அரசு அமைப்பின் பெயரில் யாராவது வந்தால், அந்த நிறுவனத்தை நேரடியாகத் தொடர்பு கொண்டு அவர்களின் அடையாளத்தை உறுதி செய்யுங்கள்.
எந்தவொரு திட்டத்திலும் உடனடி முடிவு எடுக்குமாறு அவர்கள் உங்களை வற்புறுத்தினால் எச்சரிக்கையாக இருங்கள். முறையான நிறுவனங்கள் உங்களுக்கு யோசித்து முடிவெடுக்க அவகாசம் தரும்.
உங்களுக்குத் தெரியாத அல்லது நம்பகத்தன்மை இல்லாத நபர்களிடம் உங்களது வங்கி விவரங்கள், கிரெடிட் கார்டு எண்கள் அல்லது தனிப்பட்ட அடையாள ஆவணங்களை ஒருபோதும் வழங்க வேண்டாம்.
பெரிய அளவிலான கொள்முதல் அல்லது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பு, நம்பகமான குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர்களுடன் கலந்துரையாடுங்கள்.
உங்கள் பகுதிக்கு வரும் இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து உடனடியாக உள்ளூர் போலீசாருக்கும், 'கனடிய மோசடி தடுப்பு மையத்திற்கும்' தகவல் தெரிவியுங்கள் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


