பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் சங்கீதனை உடனடியாக விடுவிக்கக் கோரி வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் இன்று (08) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா கலைஞர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் அரசியல் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, கருத்துச் சுதந்திரத்தையும் கலைஞர்களின் உரிமைகளையும் மதிக்க வேண்டும் என வலியுறுத்திய போராட்டக்காரர்கள், சங்கீதனை நிபந்தனையின்றி விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
கலைஞர்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பிலும் தமது கவலையை தெரிவித்தனர்.
பழைய பேருந்து நிலைய பகுதியில் ஆரம்பமான குறித்த போராட்டம் அங்கிருந்து மணிக்கூட்டு கோபுரசந்தி வரை ஊர்வலமாக சென்று மீண்டும் போராட்ட இடத்தை அடைந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சர் சந்திரசேகரன் சொன்னால் இனிக்கும் சங்கீதன் சொன்னால் புளிக்குதோ, கலைஞர்களுக்கும் கைவிலங்கோ,பாடுவதும் ஆடுவதும் பயங்கரவாதமா போன்ற வாசகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்தியிருந்ததுடன், கோஷங்களையும் எழுப்பியிருந்தனர்.


