மாகாண சபை தேர்தல்களுக்கு தடங்கலாக இருக்கும் சட்ட சிக்கல்களை தாண்டுவதற்கு நாடாளுமன்ற தெரிவு குழுவிற்கு முன்வைக்கப்பட்ட சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு அமைய அரசு தேர்தல்களை விரைந்து நடத்த வேண்டும் என ரெலோவின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் அரசிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
இதில் சட்டமா அதிபரினாலேயே பரிந்துரைக்கப்பட்ட 2017 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டத்தை இரத்து செய்து 1988 சட்டத்தின் கீழ் இருந்த முந்தைய தேர்தல் முறைக்கு திரும்புதல் மூலம் மாகாண சபை தேர்தலை விரைந்து நடத்த வழி செய்து உள்ளது.
இருப்பினும் அந்த பரிந்துரையை கருத்தில் கொள்ளாது அரசரப்பு புதிய திருத்தச் சட்டம் ஒன்றை கொண்டு வர வேண்டும் என்றும் அதில் பெண்களுக்கு இளைஞர்களுக்கும் அதிக ஒதுக்கீடுகளை செய்வது பற்றிய புதிய திருத்தச் சட்டத்தை எப்படி கொண்டு வருவது என்பது ஆலோசிக்க வேண்டும் என்று கூறுவது காலத்தை வீணடிக்கும் செயல்பாடாகும்.
ஏற்கனவே தமிழர்கள் தரப்பு கூறி வருகின்ற பழைய தேர்தல் முறையின் மூலம் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக சட்ட அதிபர் திணைக்களமும் பரிந்துரை செய்துள்ளது.
இதைக் கருத்தில் கொள்ளாது அவர்கள் பரிந்துரை செய்த ஏனைய விடயங்களை அரசு கவனத்தில் எடுப்பது என்பது மாகாண சபை தேர்தல்களை பிற் போடுவதற்கு முயற்சி செய்வதாகவே அமையும்.
சட்டமா அதிபரினால் பரிந்துரைக்கப்பட்ட முன்மொழிவுகளில் ஒன்று
– 2017-ஆம் ஆண்டின் மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டம், எண் 17-ஐ ரத்து செய்து, 1988 சட்டத்தின் கீழ் இருந்த முந்தைய தேர்தல் முறைக்குத் திரும்புதல் 2017 ஆம் ஆண்டு திருத்தம் இருந்தபோதிலும், முந்தைய தேர்தல் சட்டத்தை மீண்டும் வருங்கால அடிப்படையில் நடைமுறைக்குக் கொண்டுவருதல்.
மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தின் பிரிவு 3A(14)-இன் கீழ், (தொகுதி வரையறை) எல்லைகள் மீள்நிர்ணய குழு தனது அறிக்கையைத் தேவையான காலத்திற்குள் சமர்ப்பிக்கத் தவறியதால், தற்போதுள்ள 2017 திருத்தத்தை இப்போது முழுமையாகச் செயல்படுத்த முடியாது என்று சட்டமா அதிபர் கூறிய விடயம் ஏற்கனவே தெரிந்ததே. அதனாலே அதை ரத்து செய்து பழைய முறைக்கு செல்வதன் மூலம் மாகாண சபைதேர்தல்களை விரைந்து நடத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.


