ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படம் ‘கருப்பு’. இப்படம் கடந்த மாதம் 15-ந்தேதி உலகளவில் வெளியானது. சென்னையின் ஏழு கிணறு பகுதியில் வழக்கறிஞராக இருக்கும் பேபி கண்ணன் (ஆர். ஜே. பாலாஜி), ஏழை மக்களின் வழக்குகளை காசுக்காக இழுத்தடிக்கும் குணம் கொண்டவர். நீதிமன்றத்தின் இந்த ஊழல் மற்றும் காலதாமதத்தால் ஒரு குடும்பம் மனமுடைந்து காவல் தெய்வமான வேட்டை கருப்பசாமியிடம் முறையிடுகிறது. அதன் விளைவாக, கருப்பசாமி மனித அவதாரம் (சூர்யா) எடுத்து வந்து, நீதிமன்ற அமைப்பில் உள்ள ஊழல்களையும் அநீதிகளையும் எதிர்த்துப் போராடுவதே இப்படத்தின் கதையாகும்.
‘கருப்பு’ படம் வெளியானது முதல் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூல் குவித்தது. அதன்படி, ‘கருப்பு’ படம் உலக அளவில் ரூ.304 கோடிக்கு மேல், தமிழ்நாட்டில் ரூ.175 கோடி மேல் வசூல் குவித்து வருகிறது. ‘கருப்பு’ படம் நடிகர் சூர்யாவின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்தது.
இந்த நிலையில், திரையரங்குகளில் ‘கருப்பு’ படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, திரையரங்குகளில் வெளியிடப்படும் நாள் நீட்டிக்கப்படும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஓ.டி.டி. வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு ஆச்சரியத்தை அளித்துள்ளது.
ரசிகர்களின் பேராதரவு பெற்ற ‘கருப்பு’ படம் வருகிற 12-ந்தேதி முதல் பிரபல ஓ.டி.டி. தளமான ப்ரைம் வீடியோவில் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் கண்டு களிக்கலாம்.


