யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்ட மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சர் கலந்து கொண்ட மல்லாகம் நிகழ்ச்சியில் பெண்ணொருவர் ஆக்கிரோஷமான கருத்துக்களை வெளியிட்டமையால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
பெண்கள் தொடர்பான கலந்துரையாடல் என கூறி தம்மை அழைத்து விட்டு மேடை பேச்சுக்களுடன் நிகழ்வினை முடித்து சென்றதாகவும் அதனால் தான் கதைக்க வந்த பிரச்சனை தொடர்பில் கதைக்க முடியவில்லை என ஆக்ரோஷமாக கருத்துக்களை தெரிவித்தார்.
அது தொடர்பில் உடனடியாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து குறித்த பெண்ணை அமைச்சர் அழைத்து பிரச்சனை தொடர்பில் கேட்டறிந்தார்.
அதன் போது குறித்த பெண் , தான் சங்கானை பகுதியை சேர்ந்தவர் எனவும் , தான் வீட்டில் நாய்கள் காப்பகம் நடாத்தி வருவதாகவும் அதற்கான அனுமதிகளை திணைக்களங்கள் தரவில்லை , அத்துடன் தனது வீட்டிற்கான மலசல கூடம் அமைப்பதற்கான அனுமதியையும் தரவில்லை என முறையிட்டுள்ளார்.
அதனை அடுத்து அமைச்சர் , பிரதேச சபை உறுப்பினர்களை அழைத்து , பெண்ணின் முறைப்பாடுகள் மற்றும் குறைகள் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கூறி சென்றார்.
குறித்த சம்பவத்தால் , நிகழ்வுக்கு வந்திருந்தவர்கள் மத்தியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.


