TamilsGuide

கனடாவில் விபத்து ஏற்படுத்திவிட்டு நிறுத்தாமல் சென்ற கார் - 33 வயது பெண் பரிதாப மரணம்

கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில் உள்ள எஸ்கெனோபெடிச் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த 'ஹிட் அண்ட் ரன்' விபத்தில் சிக்கி 33 வயது பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் அங்குள்ள 'மிக்மாக்' சாலையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய வாகனம் தென்கிழக்கு திசையை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பகுதிக்குள் புகுந்து, அங்கு நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீது மோதியதாக ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார் மோதிய வேகத்தில் பலத்த காயமடைந்த அந்த 33 வயது பெண், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து நடந்த உடனேயே, சம்பந்தப்பட்ட வாகன ஓட்டி காரை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அவர் மறைந்துவிட்டதால், தப்பியோடிய ஓட்டுநர் குறித்தோ அல்லது விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்தோ எந்தவொரு அடையாளமும் தற்போதைக்குக் கிடைக்கவில்லை எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

விசாரணைக்காகப் பல மணி நேரம் மூடப்பட்டிருந்த மிக்மாக் சாலை, தற்போது மீண்டும் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தி வரும் ஆர்.சி.எம்.பி காவல்துறை, விபத்து நடந்த நேரத்தில் அந்தப் பகுதியில் பயணித்தவர்கள் யாரேனும் இருந்தால் அல்லது விபத்து தொடர்பான ஏதேனும் டேஷ்கேம் வீடியோ பதிவுகள் யாரிடமாவது இருந்தால், உடனடியாக தங்களைத் தொடர்புகொண்டு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். 
 

Leave a comment

Comment