முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியை மைத்ரி விக்ரமசிங்கவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவிக்கு வொல்ஹம்டன் (Wolverhampton) பல்கலைக்கழகத்தினால் கௌரவ பேராசிரியர் பட்டம் வழங்கும் விழாவில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியா சென்றபோது 16.6 மில்லியன் ரூபா அரச நிதியை மோசடி செய்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பிலேயே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
மைத்ரி விக்ரமசிங்கவிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் சட்டமா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பிரித்தானிய விஜயம் தொடர்பில் பொதுச்சொத்துச் சட்டத்தின் கீழ் நிதி மோசடி நடைபெற்றுள்ளதாக செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் எதிர்பார்ப்பதாக மேலும் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கு இன்று 8ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.


