TamilsGuide

இம்ரான் கான், புஷ்ரா பீபி நள்ளிரவில் ரகசியமாக மருத்துவமனைக்கு மாற்றம் - பாகிஸ்தானில் கொந்தளிப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி இருவரையும், சிறை அதிகாரிகள் நள்ளிரவில் ரகசியமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இது சிறை விதிமுறைகளை மீறிய செயல் என்றும், கடுமையான மனித உரிமை மீறல் என்றும் இம்ரான் கானின் பிடிஐ கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

கைபர் பக்துன்க்வா மாகாண அமைச்சர் ஷஃபி ஜான், பெஷாவரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது மத்திய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இம்ரான் கான் கடந்த 4 மாதங்களாக கண் வலியால் அவதி பட்டு வருகிறார். அவருக்கு முழு பார்வை இன்னும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவியை சிறை விதிமுறைகளை மீறி நள்ளிரவில் அதிகரிகள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

3 மணி நேரம் கடந்தும் எந்த விதமான தகவலும் வரவில்லை.

இம்ரான் கானுக்கான அடிப்படை வசதிகளை கொடுப்பதற்கு மத்திய அரசு தடுக்கிறது. சிறையில் இருக்கும் போது கூட பார்க்க அனுமதி அளிக்கவில்லை. இது நீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகும்.

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சிறையில் இருந்தபோது அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டது.

ஆனால், இம்ரான் கானை தனி சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்கிறார்கள் என அமைச்சர் சாடியுள்ளார்.

இம்ரான் கான் மற்றும் புஷ்ரா பீபியை உடனடியாக இஸ்லாமாபாத்தில் உள்ள 'ஷிஃபா சர்வதேச மருத்துவமனைக்கு'மாற்ற வேண்டும்.

அவர்களின் சொந்த மருத்துவர்கள் மூலம் அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய அரசின் தவறான நிர்வாகத்தால் பாகிஸ்தானில் விலைவாசியும், வேலையில்லாத் திண்டாட்டமும் உயர்ந்துள்ளது.

மேலும், கைபர் பக்துன்க்வா மாகாணத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய 480 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை இன்னும் தராமல் வஞ்சித்து வருகிறது.

மத்திய அரசின் இந்த அராஜக போக்கை கண்டித்து, இம்ரான் கானை விடுதலை செய்ய சொல்லி பாகிஸ்தான் முழுவதும் பிடிஐ கட்சி நடத்தப்போகும் போராட்டங்களை, இம்ரான் கான் சொன்னபடி மஹ்மூத் கான் அச்சக்சாய் தலைமை தாங்கி நடத்துவார் என கூறியுள்ளனர்
 

Leave a comment

Comment