பயங்கரவாத தடைச் சட்டத்தினைப் பயன்படுத்தி ஈழத்து சொல்லிசைப் பாடகரை இலங்கை அரசாங்கம் கைது செய்துள்ளமையை வன்மையாகக் கண்டிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஈழத்துப் பாடகரை இலங்கை அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி அவர் ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழித்துவிட்டதாகப் பெருமை பேசிய இலங்கை அரசாங்கம், ஆயுதப் போராட்டம் ஓய்ந்து பல ஆண்டுகள் ஆன பின்னரும், இப்போது ஏன் ஒரு தனி நபரின் பாடலுக்கு அஞ்சுகிறது என கேள்வியெழுப்பியுள்ளார்.
விடுதலை செய்யக் கோரிக்கை
அத்துடன் கோவில்களில் பாடுவது எல்லாம் கொடூரமான பயங்கரவாதமாகக் கருதப்பட்டால், இலங்கை அரசாங்கத்தின் கீழ் தமிழர்கள் எப்படி அமைதியாக வாழ முடியும் என கேட்டுள்ளார்.
ஒரு பாடலைப் பாடுவது கூட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களைத் தூண்டுமானால், தமிழர்கள் சிங்களவர்களுடன் எப்படி இணைந்து வாழ முடியும் என கேள்வி எழுப்பிய அவர் ஐ.நா.வும் உலக நாடுகளும் இப்போது இலங்கையின் இனவாத, இரத்தவெறி முகத்தை உணர்ந்து, தமிழ் மக்களின் விடுதலைக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
எனவே தம்பி சங்கீத்சனை விடுதலை செய்யக் கோரி, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் தங்கள் குரல்களை எழுப்ப வேண்டும் என சீமான் சுட்டிக்காட்டியுள்ளார்.


